இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி காம்பினேஷன் குறித்து கேப்டன் விராட் கோலி பேசியுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் டிரா ஆன நிலையில், 2வது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, 1-0 என டெஸ்ட் தொடரில் முன்னிலை வகிக்கிறது.
3வது டெஸ்ட் போட்டி நாளை ஹெடிங்லியில் தொடங்குகிறது. 3வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அஷ்வின் கண்டிப்பாக ஆட வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் வலுத்துள்ளன. ஹெடிங்லியில் கடைசி 2 நாள் ஆட்டத்தில் பந்து கண்டிப்பாக திரும்பும் என்பதால், அஷ்வின் சேர்க்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோல, புஜாராவை நீக்கிவிட்டு சூர்யகுமார் யாதவை சேர்க்க வேண்டும் என்ற வலியுறுத்தல்களும் உள்ளன.
இந்நிலையில், 3வது டெஸ்ட்டுக்கான இந்திய அணி காம்பினேஷன் குறித்து பேசிய கேப்டன் விராட் கோலி, அணியில் மாற்றம் செய்வதற்கான எந்தவிதமான காரணமும் இல்லை. வீரர்கள் காயமடைந்தாலன்றி, அணி காம்பினேஷனில் மாற்றம் செய்வதற்கான காரணமில்லை. வின்னிங் காம்பினேஷனை மாற்ற வேண்டிய அவசியமில்லை. 2வது டெஸ்ட்டில் இந்திய அணி பெற்ற வெற்றி அபாரமானது. எனவே அணி காம்பினேஷனில் தேவையில்லாமல் மாற்றம் செய்ய வேண்டியதில்லை என்று கேப்டன் கோலி தெரிவித்துள்ளார்.
