இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்றின் 4ஆவது போட்டி மழையால் நிறுத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தானுக்கு எதிரான சூப்பர் 4 சுற்றின் 3ஆவது போட்டியில் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து தற்போது இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 4ஆவது போட்டி நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியைப் பொறுத்த வரையில் ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக அக்ஷர் படேல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, கேஎல் ராகுல், இஷான் கிஷான் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்ஷர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது சிராஜ்.
இலங்கை:
பதும் நிசாங்கா, திமுத் கருணாரத்னே, குசால் மெண்டிஸ் (விக்கெட் கீப்பர்), சதீரா சமரவிக்ரமா, சரித் அசலங்கா, தனஞ்சயா டி சில்வா, தசுன் ஷனாகா (கேப்டன்), துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷனா, கசுன் ரஜிதா, மதீஷா பதிரனா
இதைத் தொடர்ந்து ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் களமிறங்கினர். இருவருமே நிதானமாகவே ரன்கள் சேர்த்தனர். ஆனால், சுப்மன் கில் மட்டுமே 25 பந்துகளில் 19 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி 80 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் வந்த விராட் கோலி அடுத்த 10 ரன்களில் இந்திய அணி சேர்த்த நிலையில் 3 ரன்களில் எளிதாக கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து இஷான் கிஷான் களமிறங்கினார். பொறுமையாகவே விளையாட ஆரம்பித்தார்.
கோலியை தொடர்ந்து ரோகித் சர்மாவும் ஆட்டமிழந்தார். அவர் 48 பந்துகளில் 7 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உள்பட 53 ரன்கள் எடுத்து ஒரு நாள் போட்டியில் தனது 51ஆவது அரைசதத்தை பூர்த்தி செய்தார். பின்னர் கேஎல் ராகுல் களமிறங்கினார். அவரும் நிதானமாக ஆடவே தொடங்கினார். எனினும், அவர் 44 பந்துகளில் 2 பவுண்டரிகள் மட்டுமே அடித்து 39 ரன்களில் வெல்லலங்கே பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.
அடுத்து ஹர்திக் பாண்டியா வந்தார். இதற்கிடையில் இஷான் கிஷான் 33 ரன்களில் அசலங்கா பந்தில் வெளியேறினார். அவர் ஒரு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் அடித்தார். இவரைத் தொடர்ந்து ஹர்திக் பாண்டியா 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் துனித் வெல்லலங்கே பந்தில் வெளியேறினார். அடுத்து ரவீந்திர ஜடேஜா 4 ரன்களில் அசலங்கா பந்தில் வெளியேறினார். ஜஸ்ப்ரித் பும்ரா 5 ரன்களில் அசலங்கா பந்தில் கிளீன் போல்டானார்.
இவரைத் தொடர்ந்து வந்த குல்தீப் யாதவ் ரன் ஏதும் எடுக்காமல் அசலங்கா பந்தில் வெளியேறினார். பும்ரா மற்றும் யாதவ் இருவரும் அடுத்தடுத்த பந்தில் ஆட்டமிழந்தனர். ஒரு கட்டத்தில் இந்திய அணி 47 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மழை பெய்யத் தொடங்கிது. மிதமான மழை பெய்து வரும் நிலையில் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது அக்ஷர் படேல் 15 ரன்னுடனும், முகமது சிராஜ் 2 ரன்னுடனும் விளையாடி வருகின்றனர்.
IND vs SL: சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் இந்தியா – இலங்கை பலப்பரீட்சை!
இலங்கை அணியை பொறுத்த வரையில் வேகப்பந்து வீச்சாளர்கள் யாரும் விக்கெட் கைப்பற்றவே இல்லை. துனித் வெல்லலகே 10 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 40 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்தார். இவரைத் தொடர்ந்து ஆல்ரவுண்டர் சரித் அசலங்கா 9 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன் உள்பட 18 ரன்கள் எடுத்து 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
