ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரில் எஞ்சிய போட்டிகளில் பாகிஸ்தானின் முக்கிய வீரர்களான ஹரிஷ் ராஃப் மற்றும் நசீம் ஷா ஆகியோர் இடம் பெறமாட்டார்கள் என்று கூறப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான சூப்பர் 4 சுற்று போட்டி நேற்று நடந்து முடிந்தது. இதில், பாகிஸ்தான் டாஸ் வென்று பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணியில் ரோகித் சர்மா 56 ரன்களிலும், சுப்மன் கில் 58 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து 3ஆவது மற்றும் 4ஆவது இடத்தில் களமிறங்கிய விராட் கோலி 8 ரன் மற்றும் கேஎல் ராகுல் 17 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
IND vs SL: சூப்பர் 4 ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட்டில் இந்தியா – இலங்கை பலப்பரீட்சை!
இதன் காரணமாக போட்டி ரிசர்வ் டேக்கு மாற்றப்பட்டது. அதன்படி போட்டி நடந்தது. ஆனால், மழையின் காரணமாக போட்டியானது தாமதமாக தொடங்கியது. எனினும், இந்தப் போட்டியானது இந்திய அணிக்கு சாதமாகவே நடந்தது. ஏனென்றால், போட்டியில் ஹரிஷ் ராஃப் பந்து வீச வரவில்லை. அவர் 5 ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்திருந்தார். விக்கெட்டுகள் கைப்பற்றவில்லை.
அவருக்கு கீழ் வயிறு மற்றும் பக்கவாட்டு பகுதியில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுக்க சென்றதாக கூறப்பட்டது. ஆதலால், அவர் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக பந்து வீச மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இதே போன்று நசீம் ஷாவும் 9.2 ஓவர்கள் வரையில் பந்து வீசி ஒரு மெய்டன் உள்பட 53 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார். போட்டியின் 49 ஆவது ஓவரை வீசிய நசீம் ஷா 48.2 ஆவது ஓவரின் போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக அப்படியே மைதானத்தை விட்டு வெளியேறினார்.
Pakistan vs India Super Fours 3rd Match: பாகிஸ்தானுக்கு எதிராக ஆசிய கோப்பையில் இந்தியா சாதனை வெற்றி!
இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழந்து 356 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 8 விக்கெட் இழந்து 128 ரன்கள் மட்டுமே எடுத்தது. கடைசியாக ஹரிஷ் ராஃப் மற்றும் நசீம் ஷா இருவரும் பேட்டிங் ஆட வரவில்லை. ஆகையால், இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் காரணமாக ஹரிஷ் ராஃப் மற்றும் நசீம் ஷா இருவரும் வரும் 14 ஆம் தேதி நடக்க உள்ள பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டியில் விளையாடமாட்டார்கள் என்று கூறப்படுகிறது. எனினும், இருவரும் பாகிஸ்தான் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்கள் என்பதால், இறுதிப் போட்டியில் விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
