அஜிங்க்யா ரஹானேவின் கழுத்து மீது கத்தி தொங்குவதாக ஹர்பஜன் சிங் கூறியுள்ளார்.
இந்திய அணியின் சீனியர் வீரர்களான புஜாரா மற்றும் ரஹானே ஆகிய இருவரும் டெஸ்ட் கிரிக்கெட்டில் கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பெரிய ஸ்கோர் அடிக்கமுடியாமல் திணறிவருகின்றனர். ஆனாலும் அவர்களது திறமையின் மீதான நம்பிக்கை மற்றும் கடந்த காலங்களில் அவர்கள் அணிக்கு அளித்த பங்களிப்பு ஆகியவற்றின் விளைவாக அவர்களுக்கு இந்திய அணியில் தொடர்ந்து வாய்ப்பளிக்கப்படுகிறது.
இதற்கிடையே, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி ஆகிய வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிடில் ஆர்டரில் அபாரமாக ஆடிவருகின்றனர். சீனியர் வீரர்களான புஜாரா, ரஹானே மீது இவர்கள் அழுத்தம் போடுகின்றனர்.
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டின் 2வது இன்னிங்ஸில் கண்டிப்பாக சிறப்பாக ஆடியாக வேண்டிய கட்டாயத்தில் பேட்டிங் ஆடிய புஜாராவும் ரஹானேவும் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தனர். இந்திய அணியில் இடத்தை தக்கவைக்க நல்ல இன்னிங்ஸ் ஒன்று தேவை என்ற கட்டாயத்தில், அந்த இன்னிங்ஸில் சிறப்பாக ஆடினர். ஆனால் அதே இன்னிங்ஸில் ஹனுமா விஹாரியும் அபாரமாக பேட்டிங் ஆடி அவர்களுக்கு டஃப் கொடுத்தார். 40 ரன்கள் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார் விஹாரி.
ஆனாலும் கேப்டவுனில் நடக்கும் 3வது டெஸ்ட்டில் கோலி வந்துவிட்டால் ஹனுமா விஹாரி தான் நீக்கப்படுவார். அஜிங்க்யா ரஹானே மற்றும் புஜாராவிற்கு மீண்டும் வாய்ப்பளிக்கபடும்.
இந்நிலையில், சீனியர் வீரர்களான ரஹானே மற்றும் புஜாரா குறித்து பேசியுள்ள ஹர்பஜன் சிங், ஜோஹன்னஸ்பர்க் டெஸ்ட்டில் நடந்த ஒரே நல்ல விஷயம், ரஹானே ஸ்கோர் செய்ததுதான். ரஹானே அடித்த அரைசதத்தால் கேப்டவுன் டெஸ்ட்டில் வாய்ப்பு பெறுவார். கோலி அடுத்த டெஸ்ட்டில் ஆடுவதால், ரஹானே நீக்கப்படமாட்டார்.
ரஹானே பெரிய ஸ்கோர் செய்ய வேண்டும் என விரும்புகிறேன். அரைசதங்களை சதங்களாக மாற்ற வேண்டும். ரஹானே மற்றும் புஜாராவின் கழுத்து மீது கத்தி தொங்குகிறது. அப்படியான சூழலில், ரஹானேவும் புஜாராவும் நன்றாக ஆடியிருக்கின்றனர் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
