#ICCWTC ஃபைனல்: 4ம் நாள் ஆட்டத்தின் ஒரு செசனே காலி.. லன்ச் பிரேக் வரை மழையால் பாதிப்பு
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் 4ம் நாள் ஆட்டத்தின் ஒரு செசன் முழுவதுமே மழையால் பாதிக்கப்பட்டது.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த போட்டி, மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 2ம் நாள்தான் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 3ம் நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டத்தின் 2வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது.
வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் மழை காரணமாக ஆட்டம் தாமதமான நிலையில், லேசான சாரல் மழை தொடர்ந்து பெய்துகொண்டே இருந்ததால், மதிய உணவு இடைவேளை வரை ஆட்டம் பாதிக்கப்பட்டது. 4ம் நாள் ஆட்டத்தில் ஒரு செசனே பாதிக்கப்பட்டது. அடுத்த செசனும் நடக்குமா என்பது உறுதியில்லை.
ரிசர்வ் டே ஆட்டத்துடன் சேர்த்து இன்னும் 2 நாட்கள் மட்டுமே இருப்பதால் இந்த போட்டியில் முடிவு கிடைப்பது கடினமே.