T20 World Cup ஆஃப்கானிஸ்தான் அணிக்கு சொந்த பணத்தில் ஸ்பான்சர் செய்த முகமது நபி? தீயாய்பரவும் தகவல்!உண்மை என்ன?
டி20 உலக கோப்பையில் ஆடிவரும் ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு, அந்நாட்டு அரசான தலிபான் அரசு ஸ்பான்சர் செய்ய மறுத்துவிட்டதால், அந்த அணி கேப்டன் முகமது நபி, அவரது சொந்த பணத்தில் ஸ்பான்சர் செய்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவிய நிலையில், இந்த விஷயத்தில் உண்மை என்ன என்பதை பார்ப்போம்.
டி20 உலக கோப்பையில் முகமது நபி தலைமையிலான ஆஃப்கானிஸ்தான் அணி அபாரமாக ஆடி வெற்றிகளை பெற்றுவருவதுடன், அந்நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளித்து வருகிறது. ஆஃப்கானிஸ்தான் ராணுவத்துக்கும் தலிபான்களுக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கும் மேலாக போர் நடந்துவரும் நிலையில், ஆஃப்கான் ராணுவத்துக்கு அளித்துவந்த ஆதரவை நிறுத்திக்கொண்டு அமெரிக்க படைகள் ஒதுங்கியதையடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் ஆஃப்கானிஸ்தானை முழுமையாக கைப்பற்றிய தலிபான்கள் அங்கு இடைக்கால அரசை அமைத்தது.
ஆஃப்கானிஸ்தான் மக்கள் மனங்கள் ரணமாகி கிடக்கும் இந்த காலக்கட்டத்தில் அந்நாட்டு மக்களின் ஒரே மகிழ்ச்சியாக இருப்பது கிரிக்கெட் தான். தலிபான்கள் மற்ற அனைத்து பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களையும் தடை செய்தாலும், கிரிக்கெட்டுக்கு மட்டும் ஆதரவாகவே உள்ளனர். அதை அவர்களே தெரிவித்துள்ளனர்.
கோப்பையை வெல்ல வேண்டும் என்ற கனவுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டு தங்கள் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியளிக்க வேண்டும் என்பதற்காகவே ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் டி20 உலக கோப்பையில் அபாரமாக ஆடிவருகின்றனர். ஸ்காட்லாந்துக்கு எதிரான போட்டியில் 130 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையாக போராடி கடைசி நேரத்தில் தோல்வியை தழுவியது. நமீபியாவுக்கு எதிரான போட்டியில் 62 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பை ஃபைனலில் இந்த 2 அணிகள் தான் மோதும்..! சத்தியமா இந்தியா வராது.. பென் ஸ்டோக்ஸ் அதிரடி ஆருடம்
ஸ்காட்லாந்துக்கு எதிராக ஆடிய முதல் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, தங்கள் நாட்டின் தேசிய கீதம் ஒலித்தபோது ஆஃப்கானிஸ்தான் வீரர்கள் அனைவரும் உணர்ச்சிவசப்பட்டனர். குறிப்பாக கேப்டன் முகமது நபி கண்கள் கலங்கிய புகைப்படம் சமூக வலைதளங்களில் செம வைரலானது. அந்த புகைப்படத்துடன் சேர்ந்து ஒரு தகவலும் வைரலாக பரவியது.
அதாவது, டி20 உலக கோப்பையில் ஆடும் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஸ்பான்சர் செய்ய தலிபான் அரசு மறுத்துவிட்டதாகவும், கேப்டன் முகமது நபி தனது சொந்த பணத்தில் ஸ்பான்சர் செய்து ஆஃப்கானிஸ்தான் அணியை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அழைத்து சென்றதாகவும் ஒரு தகவல் செம வைரலானது.
ஆனால் இந்த தகவல் உண்மை இல்லை. ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆஃப்கானிஸ்தான் அணிக்கு டி20 உலக கோப்பையில் ஸ்பான்சர் செய்ய டெண்டர் விட்டது. Sediki Grup என்ற நிறுவனம் $450,000 என்ற தொகைக்கு ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஸ்பான்சர் செய்துள்ளது. இந்த நிறுவனம் ஆஃப்கானிஸ்தானில் பல ஆண்டுகளாக செயல்பட்டுவரும் ஒரு நிறுவனம். ஆஃப்கானிஸ்தானில் பல துறைகளிலும், பல நாடுகளிலும் வெற்றிகரமாக வர்த்தகம் செய்துவரும் இந்த நிறுவனம் தான் ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஸ்பான்சர் செய்துள்ளது.
இதையும் படிங்க - எவின் லூயிஸின் ஆல்டைம் டி20 லெவனில் 5 இந்திய வீரர்கள்..! தல தோனி தான் கேப்டன்
ஆனால் முகமது நபி கண்கலங்கிய புகைப்படத்தை வைத்து ஒரு கூட்டம், அவரே ஆஃப்கானிஸ்தான் அணிக்கு ஸ்பான்சர் செய்ததாக தவறான தகவலை பரப்பிவிட்டது.
ஆஃப்கானிஸ்தான் கிரிக்கெட் அணிக்கு தேவையான உதவிகளை செய்துதருவதாக கிரிக்கெட் வாரியத்திடம் தலிபான் அரசு தரப்பில் ஆகஸ்ட் மாதம் தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆஃப்கானிஸ்தான் அணியின் ஸ்காட்லாந்துக்கு எதிரான வெற்றிக்கு பிறகு தலிபான் அரசு சார்பில் வாழ்த்தும் கூறப்பட்டது.
--
தலிபான் செய்தி தொடர்பாளர் முஹம்மது சுஹைல் ஷஹீன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.