#IPL2021 அவரை சேர்க்காம ஆடுறது எப்படினே புரியல..! விசித்திரமா இருக்கு.. ஐபிஎல் அணியை விளாசிய முன்னாள் வீரர்
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஆடும் லெவனில் வார்னரை சேர்க்காதது குறித்த அதிருப்தியை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப்தாஸ் குப்தா வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல்லின் வெற்றிகரமான வீரர்களில் ஒருவர் டேவிட் வார்னர். ஐபிஎல்லில் அதிக ரன்களை குவித்த வீரர்கள் பட்டியலில் 5ம் இடத்தில் இருக்கும் வார்னர், ஐபிஎல்லில் 50 அரைசதங்களை விளாசிய ஒரே வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர்.
பேட்டிங்கில் மட்டுமல்லாது கேப்டன்சியிலும் சன்ரைசர்ஸ் அணிக்காக சிறப்பாக செயல்பட்டு வெற்றிகளை பெற்றுக்கொடுத்து, அபாரமான பங்களிப்பு செய்திருப்பவர் வார்னர். வார்னரின் தலைமையில் தான் கடந்த 2016ம் ஆண்டு சன்ரைசர்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது.
சன்ரைசர்ஸ் அணிக்காக பேட்ஸ்மேனாகவும் கேப்டனாகவும் மிகச்சிறந்த பங்களிப்பு செய்துள்ள வார்னரை இந்த சீசனின் பாதியில் கேப்டன்சியிலிருந்து நீக்கியது மட்டுமல்லாது ஆடும் லெவனில் கூட வாய்ப்பளிக்கவில்லை சன்ரைசர்ஸ் அணி நிர்வாகம்.
இந்த சீசனில் தொடர் தோல்விகளை சந்தித்துவருகிறது சன்ரைசர்ஸ் அணி. டேவிட் வார்னரும் ஃபார்மில் இல்லாமல் திணறிவந்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக திடீரென டேவிட் வார்னரை கேப்டன்சியிலிருந்து நீக்கிவிட்டு, கேன் வில்லியம்சனை கேப்டனாக நியமித்த சன்ரைசர்ஸ் அணி, ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஆடும் லெவனில்கூட வார்னருக்கு வாய்ப்பளிக்கவில்லை. இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்தது.
வார்னர் மாதிரியான சாம்பியன் வீரரை ஆடும் லெவனில் கூட சேர்க்காதது ரசிகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. இந்நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள தீப்தாஸ் குப்தா, இந்த சீசன் தொடங்குவதற்கு முன்பாக டாப் 4 அணிகளில் ஒன்றாக சன்ரைசர்ஸையும் நான் நினைத்திருந்தேன். ஆனால் படுமோசமாக ஆடிவருகிறது. புவனேஷ்வர் குமார், நடராஜன் ஆகியோருக்கு காயம். வில்லியம்சன் மாதிரியான மிகச்சிறந்த கேப்டன் அணியில் இருப்பதால் கேப்டன்சியை அவரிடம் ஒப்படைத்தது சரிதான். ஆனால் வார்னரை ஆடும் லெவனில் வாய்ப்பு கொடுக்காமல் ஒதுக்கியது குழப்பமாக இருக்கிறது. ஒரு பேட்ஸ்மேனாக வார்னர் ஆடவில்லை என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என்று தீப்தாஸ் குப்தா தெரிவித்துள்ளார்.