#AUSvsIND என்ஜாய் பண்ணுங்க பாய்ஸ்.. தரமான சம்பவம் பண்ண இந்திய அணிக்கு போனஸாக பெரும் தொகையை அறிவித்த பிசிசிஐ
ஆஸி., மண்ணில் அந்த அணியை வீழ்த்தி, தொடர்ச்சியாக 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணிக்கு ரூ.5 கோடியை போனஸாக அறிவித்துள்ளது பிசிசிஐ.
இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் ஆஸி., அணியும், 2வது டெஸ்ட்டில் இந்திய அணியும் வெற்றி பெற்ற நிலையில், 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
இதையடுத்து தொடரின் முடிவை தீர்மானிக்கும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ஆஸி., அணி 369 ரன்களும், இந்திய அணி 336 ரன்களும் அடிக்க, 33 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸி., அணி 294 ரன்கள் அடித்து, 328 ரன்கள் என்ற சவாலான இலக்கை இந்திய அணிக்கு நிர்ணயித்தது.
கடைசி நாளில் அடிப்பதற்கு சவாலான அந்த இலக்கை, ஷுப்மன் கில்(91), ரிஷப் பண்ட்(89) ஆகியோரின் அபாரமான பேட்டிங் மற்றும் புஜாராவின் அரைசதம்(56) ஆகியவற்றால் 328 ரன்கள் என்ற இலக்கை அடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, 2-1 என டெஸ்ட் தொடரை வென்றது.
2018-2019 ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வென்ற இந்திய அணி, தொடர்ச்சியாக 2வது முறை டெஸ்ட் தொடரை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அதுவும், கோலி, பும்ரா, ஷமி, இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ஹனுமா விஹாரி, ஜடேஜா, அஷ்வின், கேஎல் ராகுல் ஆகிய நட்சத்திர விரர்கள் பலர் காயத்தால் தொடர்ந்து வெளியேறிய நிலையிலும், இருக்கும் வீரர்களை வைத்து சாதித்துக் காட்டியுள்ளது இந்திய அணி.
வீரர்கள் காயம், குவாரண்டின் கெடுபிடி என பல தடைகளை கடந்து ஆஸி., மண்ணில் 2வது முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்த இந்திய அணிக்கு பிரதமர் மோடி தனது பாராட்டை தெரிவித்தார்.
இந்நிலையில், பல தடைகளை தகர்த்தெறிந்து மன உறுதியுடன் போராடி, நெருக்கடியான சூழல்களில் தங்களது கேரக்டரை காட்டி டெஸ்ட் தொடரை வென்று சாதித்த இந்திய அணிக்கு, ரூ.5 கோடி போனஸாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.