BAN vs IND First Test: இந்தியா அபார பந்து வீச்சு – 8 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் எடுத்த வங்கதேசம்!
வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா 404 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த நிலையில், வங்கதேச அணி 2 ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு வெறும் 133 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நடந்து முடிந்த 3 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. இதைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதல் முதலில் பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 278 ரன்கள் எடுத்திருந்தது. அதிகபட்சமாக புஜாரா (90), ரிஷப் பண்ட் (46) எடுத்தனர். இதில், ஷ்ரேயாஸ் ஐயர் 82 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார்.
BAN vs IND: முதல் டெஸ்ட்டில் 90 ரன்கள் அடித்த புஜாரா அபார சாதனை
இதையடுத்து, 2ஆம் நாள் ஆட்டத்தைத் தொடங்கிய இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் கூடுதலாக 4 ரன்கள் எடுத்து 86 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அஸ்வின், குல்தீப் யாதவ் ஜோடி நிதானமாக ஆடி ரன்கள் குவித்தனர். 8ஆவது விக்கெட்டிற்கு இந்த ஜோடி 92 ரன்கள் சேர்த்து இந்திய அணிக்கு வலுவான ஸ்கோர் கொடுத்தனர். அஸ்வின் 58 ரன்களில் ஆட்டமிழக்க, குல்தீப் யாதவ் 40 ரன்களில் வெளியேறினார். இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 404 ரன்கள் குவித்தது.
பின்னர், தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசத்திற்கு ஆரம்பம் முதலே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் நஜ்முல் ஷாண்டோ, சிராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதையடுத்து அடுத்து வந்த வீர்ர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க வங்கதேச அணி 2ஆம் நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழந்து வெறும் 133 ரன்கள் மட்டுமே குவித்துள்ளது. இந்திய அணி சார்பில் பேட்டிங்கில் கலக்கிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளும், சிராஜ் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். உமேஷ் யாதவ் ஒரு விக்கெட் கைப்பற்றினார்.