தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட்டில் 22 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்துவிட்ட பாகிஸ்தான் அணியை கேப்டன் பாபர் அசாமும், ஃபவாத் ஆலமும் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர். 

தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவருகிறது. முதல் டெஸ்ட்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்ற நிலையில், 2வது டெஸ்ட் ராவல்பிண்டியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக இம்ரான் பட்டும் அபித் அலியும் களமிறங்கினர். இன்னிங்ஸின் 12வது ஓவரில் நோர்க்யாவின் பந்தில் அபித் அலி ஆறு ரன்களுக்கு ஆட்டமிழக்க, அசார் அலி டக் அவுட்டாகி வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரரான இம்ரான் பட்டும் 15 ரன்களுக்கு ஆட்டமிழக்க, 22 ரன்களுக்கே 3 விக்கெட்டுகளை இழந்து திணறிய பாகிஸ்தான் அணியை பாபர் அசாமும் ஃபவாத் ஆலமும் இணைந்து சரிவிலிருந்து மீட்டனர்.

3 விக்கெட்டுகளை பாகிஸ்தான் அணி விரைவில் இழந்துவிட, அதன்பின்னர் ஜோடி சேர்ந்த பாபர் அசாமும் ஃபவாத் ஆலமும் பொறுப்புடன் தெளிவாக ஆடி பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கடந்த போட்டியில் சதமடித்து பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த ஃபவாத் ஆலம், முதல் போட்டியில் ஆடிய இன்னிங்ஸை விட்ட இடத்திலிருந்து அப்படியே தொடருவதை போல சிறப்பாக ஆடிவருகிறார்.

அரைசதம் அடித்த பாபர் அசாம் 77 ரன்களுடனும் ஃபவாத் ஆலம் 42 ரன்களுடனும் களத்தில் இருக்க, முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 58 ரன்கள் அடித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைபட்டது.