தற்காலத்தின் பெஸ்ட் ஒருநாள் கிரிக்கெட் லெவன்.. சூப்பரான கேப்டன் தேர்வு.. கோலியையே புறக்கணித்த முன்னாள் வீரர்
இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சமகால கிரிக்கெட்டின் சிறந்த ஒருநாள் லெவன் வீரர்களை தேர்வு செய்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலால் கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வீரர்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். இந்நிலையில், முன்னாள் வீரர்கள் பலரும் தங்களது ஆல்டைம் உலக லெவன், சமகால கிரிக்கெட்டின் பெஸ்ட் லெவன் அணிகளை தேர்வு செய்துவருகின்றனர்.
அந்தவகையில், இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா, சமகால கிரிக்கெட்டின் பெஸ்ட் ஒருநாள் லெவன் வீரர்களை கொண்ட அணியை தேர்வு செய்துள்ளார்.
தனது ஒருநாள் லெவனின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மா மற்றும் வெஸ்ட் இண்டீஸின் ஷேய் ஹோப் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 264 என்ற அதிகபட்ச ஸ்கோருடன், 3 இரட்டை சதங்களையும் விளாசியுள்ள சாதனை நாயகன் ரோஹித் சர்மாவை தேர்வு செய்ததில் ஆச்சரியமில்லை.
ரோஹித்துக்கு ஓபனிங் பார்ட்னராக ஷேய் ஹோப்பை சோப்ரா தேர்வு செய்துள்ளார். ஷேய் ஹோப், வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்துவருகிறார். ஒவ்வொரு போட்டியிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருகிறார் ஷேய் ஹோப். விக்கெட் கீப்பரான அவரைத்தான், தனது பெஸ்ட் லெவனின் விக்கெட் கீப்பராகவும் ஆகாஷ் சோப்ரா தேர்வு செய்துள்ளார்.
மூன்றாம் வரிசை வீரர் கண்டிப்பாக கோலி தான். நான்காம் வரிசைக்கு நியூசிலாந்தின் மிகச்சிறந்த மற்றும் அனுபவம் வாய்ந்த மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரோஸ் டெய்லரை தேர்வு செய்த ஆகாஷ் சோப்ரா, ஐந்தாம் வரிசை வீரராக இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனை தேர்வு செய்து, அவரையே இந்த அணியின் கேப்டனாகவும் நியமித்துள்ளார்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இந்த அணியில் இருந்தும், கேப்டன் பொறுப்பிற்கு அவரை புறக்கணித்து, அந்த பொறுப்பை இயன் மோர்கனுக்கு கொடுத்துள்ளார் ஆகாஷ் சோப்ரா. இங்கிலாந்து அணியை படிப்படியாக மேம்படுத்தி, மிகச்சிறந்த அணியாக உருவாக்கி, அந்த அணிக்கு கடந்த ஆண்டு உலக கோப்பையையும் வென்று கொடுத்தார் இயன் மோர்கன். இங்கிலாந்து அணியை மேம்படுத்தி வலுவான அணியாக உருவாக்கியவர் இயன் மோர்கன். அவர் சிறந்த கேப்டன் என்பதால், அவரை கேப்டனாக தேர்வு செய்ததாக ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஆல்ரவுண்டர்களாக வங்கதேசத்தின் அனுபவ வீரர் ஷகிப் அல் ஹசன் மற்றும் இங்கிலாந்தின் உலக கோப்பை நாயகன் பென் ஸ்டோக்ஸ் ஆகிய இருவரையும் தேர்வு செய்துள்ளார். ஸ்பின்னராக குல்தீப் யாதவையும், ஃபாஸ்ட் பவுலர்களாக முகமது ஷமி, நியூசிலாந்தின் லாக்கி ஃபெர்குசன் மற்றும் ஆஸ்திரேலியாவின் மிட்செல் ஸ்டார்க் ஆகிய மூவரையும் தேர்வு செய்துள்ளார். பும்ராவிற்கு தனது அணியில் ஆகாஷ் சோப்ரா இடமளிக்கவில்லை. 12வது வீரராக பாபர் அசாமை தேர்வு செய்திருக்கிறார்.
ஆகாஷ் சோப்ராவின் சமகால ஒருநாள் கிரிக்கெட் லெவன்:
ரோஹித் சர்மா, ஷேய் ஹோப்(விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ரோஸ் டெய்லர், இயன் மோர்கன்(கேப்டன்), ஷகில் அல் ஹசன், பென் ஸ்டோக்ஸ், மிட்செல் ஸ்டார்க், குல்தீப் யாதவ், முகமது ஷமி, லாக்கி ஃபெர்குசன்.
12வது வீரர் - பாபர் அசாம்.