அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் ராகுல் திரிபாதிக்கு இடம் கிடைத்திருந்தாலும், அவருக்கு ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்று முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார். 

ஐபிஎல்லில் கடந்த சில சீசன்களாகவே தொடர்ச்சியாக சிறப்பாக ஆடிவருபவர் ராகுல் திரிபாதி. வழக்கம்போலவே ஐபிஎல் 15வது சீசனிலும் சன்ரைசர்ஸ் அணிக்காக அபாரமாக விளையாடி 14 போட்டிகளில் 413 ரன்களை குவித்தார். ஆனால் அவருக்கு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அதேபோல மிகத்திறமையான வீரரும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனுமான சஞ்சு சாம்சனுக்கும் தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் இடம் கிடைக்கவில்லை. சாம்சன் 17 போட்டிகளில் 458 ரன்களை குவித்திருந்தார். 

திரிபாதி மற்றும் சாம்சன் ஆகிய இருவருக்கும் தென்னாப்பிரிக்க டி20 தொடருக்கான இந்திய அணியில் இடம் கிடைக்காதது விமர்சனத்துக்குள்ளானது. ஆனால் அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இவர்கள் இருவருக்கும் இடம் கிடைத்தது. ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய டி20 அணியில் திரிபாதி மற்றும் சாம்சன் ஆகிய இருவருக்கும் அணியில் இடம் கிடைத்துள்ளது.

ஆனாலும் அவர்கள் இருவருக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்காது என்று ஆகாஷ் சோப்ரா கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய ஆகாஷ் சோப்ரா, திரிபாதிக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது. 9 பேட்ஸ்மேன்களை அணியில் எடுத்துள்ளனர். தீபக் ஹூடா, வெங்கடேஷ் ஐயர் ஆகியோருக்கு தென்னாப்பிரிக்க தொடரிலேயே ஆட வாய்ப்பு கிடைக்கவில்லை. திரிபாதிக்கு மட்டுமல்ல; சஞ்சு சாம்சனுக்கும் ஆடும் லெவனில் இடம் கிடைக்க வாய்ப்பில்லை. தென்னாப்பிரிக்க தொடருக்கான அணியில் இடம்பெற்ற வீரர்களுக்கே இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அதனால் சாம்சன், திரிபாதிக்கு முன், அயர்லாந்து தொடரில் அவர்கள் ஆடும் லெவனில் இடம்பெற தகுதியானவர்கள். எனவே இவர்களுக்கு இடம் கிடைக்காது என்று ஆகாஷ் சோப்ரா கூறியுள்ளார்.