இந்தியாவுக்கே இந்த நிலைமைனா நியூசிலாந்துக்கு சொல்லவா வேணும்..? ஆகாஷ் சோப்ரா அதிரடி
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலில் நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தாலும், விரைவில் போட்டி இந்தியாவின் பக்கம் திரும்பும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனல் கடந்த 18ம் தேதி தொடங்கியிருக்க வேண்டியது. இந்தியா - நியூசிலாந்து இடையேயான இந்த போட்டி, மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 2ம் நாள்தான் போட்டி தொடங்கியது. முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 217 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 3ம் நாள் ஆட்டமான நேற்றைய ஆட்டத்தின் 2வது செசனில் முதல் இன்னிங்ஸை தொடங்கிய நியூசிலாந்து அணி, 3ம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருந்தது.
வில்லியம்சனும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்த நிலையில், 3ம் நாள் ஆட்டம் முடிந்த நிலையில், 4ம் நாள் ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் தொடர் மழை காரணமாக முதல் செசன் முழுவதுமே ஆடவில்லை.
இந்திய அணி 217 ரன்களுக்கே சுருண்ட நிலையில், நியூசிலாந்து அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் அடித்திருக்கும் நிலையில், நியூசிலாந்து அணி நல்ல நிலையில் இருப்பது போன்று தெரிந்தாலும் விரைவில் இந்த போட்டி முழுக்க முழுக்க இந்தியாவின் பக்கம் திரும்பும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஆகாஷ் சோப்ரா, என்னை பொறுத்தமட்டில் இந்த போட்டி இந்தியாவிற்கு சாதகமாக இந்தியாவின் பக்கம் திரும்பும். நியூசிலாந்து அணி நல்ல நிலையில் இருக்கிறது. இன்னும் 116 ரன்கள் மட்டுமே பின் தங்கியிருக்கும் நிலையில், 8 விக்கெட்டுகள் கையில் இருப்பதால் நல்ல நிலையில் இருப்பதுபோன்று தோன்றும். ஆனால் 146/3 என்ற நிலையில் இருந்து 217 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டாகும்போது, நியூசிலாந்துக்கும் அப்படியான சரிவு அமையும் என்று ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார்.