உலகக் கோப்பையில் நாளை தொடங்க உள்ள இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணியை பார்ப்பதற்கு 40,000 பெண்களுக்கு உணவுடன் கூடிய இலவச டிக்கெட் வழங்க பாஜக முடிவு செய்துள்ளது.
உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 நாளை 5ஆம் தேதி முதல் தொடங்குகிறது. உலகக் கோப்பை தொடரில் 10 அணிகள் இடம் பெற்று 45 லீக் போட்டிகள், 2 அரையிறுதிப் போட்டிகள், ஒரு இறுதிப் போட்டி என்று மொத்தம் 48 லீக் போட்டிகளில் விளையாடுகின்றன. சென்னை, பெங்களூரு, கொல்கத்தால், லக்னோ, அகமதாபாத், தர்மசாலா, புனே என்று 10 மைதானங்களில் இந்தப் போட்டி நடத்தப்படுகிறது.
உலகக் கோப்பைக்கு முன்னதாக 10 அணிகளுக்கும் வார்ம் அப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், இந்திய அணிக்கான 2 போட்டியும் மழையின் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து, நாளை நடக்க உள்ள முதல் போட்டிக்காக இங்கிலாந்து வீரர்கள் அகமதாபாத் மைதானத்திற்கு வருகை தந்துள்ளனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், நாளை பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியை பார்ப்பதற்கு 40,000 பெண்களுக்கு இலவச டிக்கெட் மற்றும் உணவு வழங்க பாஜக முடிவு செய்துள்ளது. இதற்காக அகமதாபாத் மாநகராட்சியில் உள்ள 48 வார்டுகளிலிருந்தும் பெண்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு இலவச டிக்கெட்டுகள் மற்றும் டீக்கு இரண்டு டோக்கன்களும், சிற்றுண்டிக்கு ஒரு டோக்கனும், உணவு பாக்கெட்டுகளுக்கு ஒரு டோக்கனும் வழங்கப்பட உள்ளன.
