திருச்செந்தூர் முருகன் கோயிலில் தரிசனம் செய்ய கேரள பெண் பக்தர்களிடம் ஊழியர்கள் ரூ.11,000 கேட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

Thiruchendur Murugan Temple Staff Charging Exorbitant Fees For Darshan: தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அமைந்துள்ள முருகன் கோயில் உலகப்புகழ் பெற்றதாகும். முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாவது வீடாக வங்கக்கடல் ஓரம் அமைந்துள்ள கோயிலுக்கு தமிழகம மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பக்தர்களும் வருகை புரிகின்றனர். இங்கு நடக்கும் சூரசம்ஹாரம் நிகழ்வை காண பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரள்கின்றனர். இது மட்டுமின்றி முருகனுக்கு உகந்த முக்கியமான நாட்களில் சுமார் 4 அல்லது 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் முருகப்பெருமானின் ஆசி பெற்று வீடு திரும்புகின்றனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சாதி, மதம் கடந்த முருகப்பெருமான்

சாதி, மதங்களை கடந்து முருகனை தரிசிக்க தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருச்செந்தூருக்கு வருகை தருகின்றனர். நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகமாவதால் முருகனை சீக்கிரம் தரிசிக்கலாம் என கூறி கோயில் ஊழிய‌ர்கள் சிலர் பக்தர்களை ஏமாற்றி அதிக பணம் பறிப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இந்த குற்றச்சாட்டுகளை உண்மையாக்கும் வகையில் திருச்செர்ந்தூர் கோயிலில் நடந்த ஒரு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள பெண் பக்தர்களிடம் மோசடி

அதாவது கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் பக்தர்கள் சிலர் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குச சென்றுள்ளனர். அப்போது தாங்கள் கோயில் ஊழியர்கள் என்று கூறிக்கொண்டு அவர்களை அணுகிய சிலர், மிக விரைவாக சாமி தரிசனம் செய்துவைப்பதாக கூறி பெண் பக்தர்களிடம் ரூ.11,000 பணம் கேட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கேரள பக்தர்கள் இது குறித்து கோயில் நிர்வாகத்திடமும், அதிகாரிகளிடமும் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

முருகனை தரிசிக்க ரூ.11,000 கேட்ட ஊழியர்கள்

திருச்செந்தூர் கோயில் ஊழியர்கள் கேரள பெண் ‍பக்தர்களிடம் ரூ.11,000 பணம் கேட்டனரா? இல்லை கோயில் ஊழியர்கள் என்று கூறிக்கொண்டு வேறு சிலர் பக்தர்களிடம் பணம் கேட்டனரா? என்பது உறுதியாக தெரியவில்லை. அண்மைகாலமாக திருச்செந்தூரில் கூட்டம் அலைமோதும் நிலையில், கோவில் ஊழியர்கள் என்ற பெயரில் சிலர் பக்தர்களிடம் பல ஆயிரம் பணம் பறிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

பக்தர்கள் கோரிக்கை

திருச்செந்தூர் கோயிலில் ரூ.100 கட்டண தரிசனம் மற்றும் பொது தரிசனம் மட்டுமே நடைமுறையில் உள்ளது. மற்ற எந்த தரிசன கட்டணமும் நடைமுறையில் இல்லை என கோயில் நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. ஆகையால் கோயிலுக்கு வரும் பக்தர்களிடம், குறிப்பாக வெளிமாநில பக்தர்களிடம், இதுபோன்ற முறைகேடுகள் நடக்காமல் இருக்க நுழைவாயிலில் சரியான கட்டண விவரங்கள் கொண்ட விளம்பரப் பலகைகளை அமைக்க வேண்டும். முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அறநிலையத்துறை என்ன பதில் சொல்லப் போகிறது?

திருச்செந்தூர் முருகன் கோயில் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. பிரபலமான கோயில்களில் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை கூட செய்யாத அறநிலையத்துறை, கோயில்களில் வரும் வருமானத்தை மட்டும் அள்ளிக்கொள்வதாக பல்வேறு இந்து அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. ''வாழ்க்கையில் ஏற்பட்ட துன்பங்களை அப்பன் முருகன் துடைத்தெறிவார்'' என்ற நம்பிக்கையில் தான் லட்சக்கணக்கான ஏழை, எளிய மக்கள் திருச்செந்தூரை நோக்கி ஓடி வருகின்றனர். ஆனால் அங்கும் இப்படி மோசடிகள் நடந்தால் அவர்கள் எங்கே போவார்கள்?