புதுச்சேரியின் ரெயின்போ நகர் பகுதியில் திடீரென வீட்டில் இருந்து மர்ம பொருள் வெடித்த சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர் படுகாயங்களுடன் போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

புதுச்சேரி ரெயின்போ நகர் மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி, இவரது மனைவி சாரதா இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் புதுச்சேரி நகர பகுதியான பாரதி வீதியில் நகை அடகு கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் குருமூர்த்தி மற்றும் அவரது மகன்கள் இருவரும் கடைக்கு சென்று விட்ட நிலையில் சாரதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது எதிர்பாரா விதமாக வீட்டில் மர்ம பொருள் ஒன்று வெடித்து சிதறியது. இதில் வீட்டில் உள்ள கதவுகள், கண்ணாடி ஜன்னல்கள், வீட்டில் உள்ள பொருள்கள், பாத்திரங்கள் என வீட்டின் முதல் மாடி வரை வீடு சேதம் அடைந்தது. மேலும் வீட்டிலிருந்த குருமூர்த்தியின் மனைவி சாரதா படுகாயத்துடன் நாற்காலியில் அமர்ந்தபடி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் பெரிய கடை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் சிந்தா கோதண்டராமன் தலைமையிலான காவல் துறையினர் வீட்டில் படுகாயம் அடைந்த சாரதாவை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

புதுவையில் சற்று நேரத்தில் சரிந்து விழுந்த பிரமாண்ட நீர் தேக்க தொட்டி

மேலும் இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன். ரெயின்போ நகர் மூன்றாவது குறுக்கு தெருவில் காலை 11.30 மணியளவில் வீட்டில் பயங்கர சத்தத்துடன் மர்மப்பொருள் ஒன்று வெடித்துள்ளது.

இதில் படுகாயம் அடைந்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் மர்ம பொருள் வெடித்ததில் வீடு முழுவதும் சேதமடைந்து பொருட்கள் நாசமாகி உள்ளன. இது தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம். அக்கம் பக்கத்தில் கேட்கும் போது என்ன நடந்தது என்று தெரியவில்லை. ஆனால் பயங்கர சத்தம் மட்டும் கேட்டதாக தெரிவிக்கிறார்கள் என்று கூறிய அவர் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வர உள்ளார்கள். அவர்கள் வந்தவுடன் முழு விசாரணைக்கு பிறகு வீட்டில் என்ன பொருள் வெடித்தது என்று தெரியவரும் என்று கூறினார்.

மனைவியை மீட்டுத்தரக்கோரி ஆட்சியர் அலுவலகத்தில் குழந்தைகளுடன் கணவர் தர்ணா

ஆனால் இதுவரை வீட்டில் உள்ள சிலிண்டர் வெடிக்கவில்லை என்பது மட்டும் உறுதியாகி உள்ளதாக தெரிவித்த அவர் முழு விசாரணைக்கு பிறகே என்ன பொருள் வெடித்தது என்பது தெரியவரும் என்று கூறினார். மேலும் குடியிருப்புகள் அதிகம் மிகுந்த முக்கிய நபர்கள் வசிக்கும் இடத்தில் தற்போது மர்ம பொருள் வெடித்து ஒருவர் பருகாயம் அடைந்தும் வீடுகள் சிதறிய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.