ஓபிஎஸ் ஆதரவு மாவட்ட செயலாளர்கள் எண்ணிக்கை 7ஆக சரிவு.! நள்ளிரவில் இபிஎஸ் அணிக்கு பல்டி அடித்த நிர்வாகிகள்
ஓபிஎஸ் அணிக்கு ஆதரவு தெரிவித்து வந்த மாவட்ட செயலாளர்கள் ஒன்றன் பின் ஒன்றாக இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்ததால், ஓபிஎஸ் தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது.
பொதுச்செயலாளர் ஆகிறார் இபிஎஸ்
அதிமுகவில் ஒற்றை தலைமை தொடர்பாக தீர்மானம் கொண்டுவரும் நடவடிக்கை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. நாளை அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் ஒற்றை தலைமை தொடர்பான தீர்மானம் தயார் செய்யப்பட்டுள்ளது. பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் பதவி ரத்து செய்யப்பட்டு ஒற்றை தலைமை என முடிவு எடுக்கப்படவுள்ளது. தொடர்ந்து பொதுக்குழு,செயற்குழு உறுப்பினர்களின் ஆதரவோடு அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுப்பேற்க உள்ளார். இந்தநிலையில் இதற்கான வேலைகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில் அதிமுக மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 75 பேரில் 68 பேர் இபிஎஸ் தரப்புக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வரை ஓபிஎஸ் தரப்பு ஓபிஎஸ் தரப்புக்கு 12 முதல் 15 மாவட்ட செயலாளர்கள் அதரவு தெரிவித்து வந்த நிலையில் நேற்று 7 ஆக குறைந்துள்ளது. 5 மாவட்ட செயலாளர்கள் இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்து திடீர் பல்டி அடித்துள்ளனர்.
திடீர் பல்டி அடித்த நிர்வாகிகள்
ஓபிஎஸ் ஆதரவு மாவட்டச் செயலாளர்கள் எண்ணிக்கை 7 ஆக சரிந்துள்ளது. அரியலூர் மாவட்டத்தின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர். நேற்று இரவு அரியலூர் மாவட்ட கழக செயலாளர் தாமரை எஸ் ராஜேந்திரன் தனது மாவட்ட நிர்வாகிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து ஆதரவு தெரிவித்தார். தற்போது வரை ஓபிஎஸ்க்கு தேனி மாவட்ட செயலாளர் சையது கான் ,
சென்னை தெற்கு கிழக்கு மாவட்ட செயலாளர் வேளச்சேரி அசோக், கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் அசோகன், திருச்சி மாநகர் மா.செ வெள்ளமண்டி நடராஜன், தஞ்சாவூர் தெற்கு வைத்தியலிங்கம், தஞ்சை வடக்கு சுப்ரமணி, பெரம்பலூர் ராமச்சந்திரன் ஆகிய மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே தற்போது ஓ.பி.எஸ் க்கு ஆதரவாக உள்ளனர். இதுவரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர் செல்வம் ஆதரவாக இருந்த நெல்லை மாவட்ட செயாலளர் தச்சை கணேஷ ராஜா, விருதுநகர் மாவட்ட செயலாளர் சாத்தூர் ரவிச்சந்திரன்,திருவள்ளுவர் தெற்கு மாவட்டச் செயலாளர் அலக்சாண்டர் ,திருவள்ளூர் வடக்கு மா.செயலாளர் சிறுணியம் பலராமன் , அரியலூர் மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவளித்துள்ளனர் .ஓபிஎஸ் ஆதரவாக 12 மாவட்டச் செயலாளர்கள் உள்ளதாக வைத்தியலிங்கம் தெரிவித்திருந்த நிலையில், தற்போது 7 மாவட்டச் செயலாளர்கள் மட்டுமே ஆதரவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்
ஓ.பன்னீர்செல்வத்தின் இறுதி அஸ்திரம் இதுதானா? விழுவாரா? திமிரு எழுவாரா? எடப்பாடியார்..!