விஜயபாஸ்கரின் இலுப்பூர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நிறைவு..! ஆவணங்கள் சிக்காததால் ஏமாற்றம்
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடைபெற்று வந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை நிறைவு பெற்றுள்ளது. சோதனையில் ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விஜயபாஸ்கர் வீட்டில் சோதனை
தமிழக சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதன் அடிப்படையில் டாக்டர் விஜயபாஸ்கர் இடம் தொடர்பில் இருந்த தேனி மருத்துவ கல்லூரி முதல்வர், மருத்துவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை செய்து வருகின்றனர். சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது, ஊத்துக்கோட்டை, மஞ்சக்கரணை என்ற பகுதியில் மருத்துவமனையே கட்டப்படாத நிலையில் 250 படுக்கை வசதிகளுடன் 2 ஆண்டுகளாக செயல்பட்டு வருவதாகவும், புதிய மருத்துவ கல்லூரி தொடங்குவதற்கு மருத்துவமனை தகுதியானது எனவும் சான்றிதழ் வழங்கியுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருவள்ளூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முறைகேடாக அனுமதி கொடுக்கப்பட்டதாகவும் கூறி லஞ்ச ஒழிப்பு போலீஸார் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு.. என்ன காரணம் தெரியுமா? எஃப்ஐஆரில் பரபரப்பு தகவல்.!
ஏமாற்றமடைந்த அதிகாரிகள்
விஜயபாஸ்கர் உள்ளிட்ட ஏழு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் சென்னையில் உள்ளிட்ட 13 இடங்களில் சோதனை மேற்கொண்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இலுப்பூரில் உள்ள வீட்டில் காலை 6 மணி முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இந்த சோதனையின் போது வீட்டில் இருந்த ஆவணங்களை சோதனை செய்தனர் அதில் தற்போது முறைகேடாக மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டதற்கான எந்த வித ஆவணங்களும் சிக்கவில்லையென்று கூறப்படுகிறது. தற்போது புதுக்கோட்டை இலுப்பூரில் உள்ள வீட்டில் மட்டும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை முடிவடைந்த நிலையில் மற்ற இடங்களில் சோதனையானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இதையும் படியுங்கள்