காங்கிரஸ் கட்சியை எனது தெய்வமாகவும் குடும்பமாகவும் பார்கிறேன். எனது உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது. இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரசில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன். 

தன்னிச்சையாக மாநில தலைமை செயல்பட கூடாது. இடைக்கால நீக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்த சோனியா, ராகுலுக்கு நன்றி என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழக காங்கிரஸ் கட்சியில் எதுக்கு பஞ்சம் இருக்கிறதோ இல்லையோ கோஷ்களுக்கு பஞ்சமே இருக்காது. ப.சிதம்பரம், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோர் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். இதனால், அவ்வப்போது, சென்னை காங்கிரஸ் அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அடிதடி, வேட்டி உருவல் நிகழ்வுகளுக்கு பஞ்சமே இருக்காது. 

இதையும் படிங்க;- காங்கிரஸ் கட்சியில் இருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்..! ஒழுங்கு நடவடிக்கை குழு அதிரடி அறிவிப்பு

இந்நிலையில், காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்யமூர்த்தி பவனில் கடந்த 15ம் தேதி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, காங்கிரஸ் நிர்வாகிகளுக்குள் மோதல் ஏற்பட்டு ஒருவருக்கு ஒருவர் மோதிக்கொண்டனர். இதனையடுத்து இந்த பிரச்சனைக்கு காரணமான சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன் மீது நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைவர்கள் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. 

இது தொடர்பாக விளக்கம் அளிக்க கட்சியின் மாநில பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மற்றும் எஸ்.சி பிரிவு தலைவர் எம்.பி.ரஞ்சன் குமார் ஆகியோருக்கு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு நோட்டீஸ் அனுப்பியது. இதன் அடிப்படையில் நேற்று கூடிய ஒழுங்கு நடவடிக்கைக் குழுவில் நிரஞ்சன் குமார் ஆஜராகினார். ஆனால், ரூபி மனோகரன் விளக்கத்தையும், நேரில் ஆஜராக அவகாசமும் கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில், ரூபி மனோகரனை காங்கிரஸ் கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்குவதாக காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக்குழு அறிவித்தது. இந்நிலையில், ரூபி மனோகரன் மீதான நடவடிக்கை இயற்கை நீதி கொள்கைக்கு எதிரானது என தெரிவித்து சஸ்பெண்ட் உத்தரவை காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் நிறுத்தி வைத்தார். 

இந்நிலையில், நாங்குநேரி எம்எல்ஏ ரூபி மனோகரன் நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- காலையில் செய்யப்பட்ட சஸ்பெண்ட் மாலையில் ரத்தானது சரித்திர முடிவு. தன்னிச்சையாக மாநில தலைமை செயல்பட கூடாது. மாநில அளவில் நடக்கும் நிகழ்வு அகில இந்திய தலைமைக்கு செல்லவில்லை என்ற பொய்யான தகவல் துடைத்தெறியப்பட்டுள்ளது. இடைக்கால நீக்கத்தை உடனடியாக முடிவுக்கு கொண்டுவந்த சோனியா, ராகுலுக்கு நன்றி என தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க;- ரூபி மனோகரன் சஸ்பெண்ட் உத்தரவு நிறுத்தி வைப்பு… காங். மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் அதிரடி!!

காங்கிரஸ் கட்சியை எனது தெய்வமாகவும் குடும்பமாகவும் பார்கிறேன். எனது உடலில் காங்கிரஸ் ரத்தம் ஓடுகிறது. இறுதி மூச்சு உள்ளவரை காங்கிரசில் மட்டுமே அரசியல் பணியாற்றுவேன். காங்கிரஸ் வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. இந்த சட்டமன்ற உறுப்பினர் பதவி காங்கிரஸ் கட்சி கொடுத்த கொடை. என் வாழ்க்கையை காங்கிரஸ் இயக்கத்திற்கு ஒப்படைப்பேன். ராகுல் காந்தியின் நடைப்பயணம் இந்தியாவில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 2024ல் ராகுல் காந்தி பிரதமராவது உறுதி என ரூபி மனோகரன் தெரிவித்துள்ளார்.