- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!
தமிழகத்தில் NDA ஆட்சி உறுதி.. திமுக கொள்ளை கும்பல் தூக்கியெறியப்படும்.. மதுரையில் கர்ஜித்த பிரதமர் மோடி!
திமுக அரசு ஏழைகள், விவசாயிகளிடம் இருந்து திருடுகிறது. திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மக்களிடம் இருந்து திருடுகிறார்கள். யார் அதிகம் ஊழல் செய்வது என திமுக அமைச்சர்கள் போட்டி போடுகிறார்கள் என்று பிரதமர் மோடி கடுமையாக குற்றம்சாட்டினார்.

வெற்றிவேல் வீரவேல் என முழக்கமிட்ட பிரதமர் மோடி
மதுரை மண்டேலா நகரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பிரதமர் மோடி, எடப்பாடி பழனிசாமி, அன்புமணி, டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி 'வெற்றிவேல் வீரவேல்' என முழக்கமிட்டு அனைவருக்கும் வணக்கம் என தமிழில் கூறி தனது உரையை தொடங்கினார்.
திருப்பரங்குன்றத்தில் திமுக சதி
இதனைத்தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, ''இந்த கூட்டத்துக்கு வருவதற்கு முன்பாக திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தரிசனம் செய்தேன். திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்பதற்காக உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞர் பூர்ணசந்திரனுக்கு எனது அஞ்சலி. திமுக அரசின் நியாமில்லாத தன்மையால் இது நடந்தது. திமுக என்ன சதி செய்தாலும் வாய்மையே வெல்லும். முருக பக்தர்கள் வெற்றி பெறுவார்கள்.
தமிழ்நாட்டை திமுக கொள்ளையடிக்கிறது
தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிடலாம் என சிலர் கனவு காண்கிறார்கள். திமுகவின் கனவு கானல் நீர் போன்றது. தமிழ்நாட்டை திமுக கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறது. திமுகவை வெளியேற்ற மக்கள் தீர்மானித்து விட்டார்கள். 2021 தேர்தலில் திமுகவுக்கு பெரும்பான்மை வழங்கிய மக்களுக்கு திமுக ஏதும் செய்யவில்லை. பணம் நமக்கு, பிரச்சனை மக்களுக்கு என திமுக அரசு செயல்பட்டது. மதுரையில் ஊழலால் மேயரே பதவி விலகி விட்டார். மதுரை என்றாலே திமுகவுக்கு பிடிக்காது.
திமுக மக்களுக்கு நல்லது செய்யவில்லை
மத்திய அரசு நிதி கொடுத்தாலும் திமுக அரசு நல்லது செய்யாது; நல்லது செய்யவும் விடாது. ஏழைகளுக்காக திமுக அரசு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடவில்லை. திமுக அரசின் சில்லறை அரசியலால் ஏழை மக்கள் ஏன் அவதிப்பட வேண்டும்? ஏழைகளுக்கு 3 லட்சம் வீடுகள் கட்டிக்கொடுக்கும் திட்டத்தை திமுக அரசு முடக்கியது.
காங்கிரசும், திமுகவும் தமிழகத்துக்கு செய்தது என்ன?
காங்கிரசும், திமுகவும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்ததால் தமிழகத்துக்கு எந்த ஒரு நன்மையும், திட்டங்களும் கிடைக்கவில்லை. இப்போது தமிழர்களின் உரிமை என வாய்கிழிய பேசிய திமுக, அப்போது என்ன செய்தது? தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. அம்மா ஜெயலலிதா ஆட்சியில் மக்கள் வாழ்க்கை எவ்வளவு சிறப்பாக இருந்தது என்பதை பெண்கள் நினைத்து பார்க்கிறார்கள்.
ஊழலில் திளைக்கும் திமுக அரசு
என்னை கண்டு எனக்கும், எனது தந்தைக்கும் அச்சம் இல்லை என திமுகவில் சிலர் (உதயநிதி ஸ்டாலின்) பேசுவதாக கேள்விப்பட்டேன். ஜனநாயக நாட்டில் யாரை கண்டும் யாரும் பயப்பட தேவையில்லை. என்னிடத்தில் பயமில்லை என்று யாராவது கூறினால் அவர்கள் என்னை பாராட்டுகிறார்கள் என்று அர்த்தம். நேர்மையின் மறு உருவமாக காமராஜர் இருந்தார். ஆனால் திமுக அதற்கு எதிர்மாறாக உள்ளது. தமிழகத்தில் டாஸ்மாக்கில் மட்டும் ரூ.40,000 கோடி அளவுக்கு உழல் நடந்துள்ளது. ஒவ்வொரு துறையிலும் ஊழல் நடந்துள்ளது.
ஊழல் செய்வதில் திமுக அமைச்சர்கள் போட்டி
திமுக அரசு ஏழைகள், விவசாயிகளிடம் இருந்து திருடுகிறது. திமுக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் மக்களிடம் இருந்து திருடுகிறார்கள். யார் அதிகம் ஊழல் செய்வது என திமுக அமைச்சர்கள் போட்டி போடுகிறார்கள். ஆனால் தமிழகத்தில் திறமையான, நேர்மையான அரசை என்டிஏ அமைக்கும். கச்சத்தீவு விவகாரத்தில் திமுக மவுனம் காத்தது. ஜல்லிகட்டுக்கு காங்கிரஸ் தடை விதித்தது.
ஆனால் பாஜக அரசு ஜல்லிக்கட்டை மீட்டெடுத்தது. ஜரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் போடப்பட்டது. புதிய ஒப்பந்தத்தால் தமிழ்நாட்டின் ஜவுளி, மின்னணு துறை வளரும். இவை தொடர வேண்டும். தமிழகத்தில் ஊழல் அற்ற, நேர்மையான, செயல்திறன் மிக்க ஆட்சி அமைய தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

