வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேசுவதா.? நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்க சேகர்பாபு
உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அமைச்சர் சேகர்பாபு, எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக கேட்கவும், அதற்கு பதில் அளிக்கவும் இந்த துறை தயாராக உள்ளதாக கூறினார்.
![Sekarbabu released the list of projects completed in the charity department KAK Sekarbabu released the list of projects completed in the charity department KAK](https://static-ai.asianetnews.com/images/01hftxp9ej00esx2mta56wsbbf/whatsapp-image-2023-11-22-at-12-35-03-pm_363x203xt.jpg)
அறநிலையத்துறை தொடர்பாக தவறான தகவல்கள்
தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோயிலிலும் சொத்துகளைத் திருடி வருகிறார்கள். கோயில்களில் திருடப்படும் சொத்துகள் யாருக்குப் போகின்றன எனத் தெரியவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றம்சாட்டியிருந்தார். இந்த பேச்சு தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அறிநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் சமூக வலைதளங்களில் பதிவுகள் வருகிறது.
இந்து சமய அறநிலையத்துறை தொடங்கியதில் இருந்து இல்லாத பல முன்னேற்றங்கள் கண்டுள்ளது. இது உருவாக்கப்பட்டதன் நோக்கம் 1818 ஆம் ஆண்டு திருக்கோவில் அன்றாட விசேஷங்களுக்கு கொடுக்கும் பொருட்கள் தவறான வழியில் போவதாக வந்த புகார் அடுத்து தொடங்கப்பட்டது.
அறநிலையத்துறை சாதனைகள் என்ன.?
1959 ஆம் ஆண்டு இந்து சமய அறநிலையத்துறை சட்டம் உருவாக்கப்பட்டது. பரம்பரை அறங்காவலராக இருந்தவர்கள் கோவில் பொருள்களை பயன்படுத்துகிறார்கள் என்ற புகாருக்கு பின் தான் இந்த துறை உருவாக்கப்பட்டது. திமுக ஆட்சி வந்ததும் அனைத்து கோவில்களிலும் உள்ள குறைகளை பதிவு செய்ய சொல்லி அதனை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். 48 முதுநிலை கோவில்களை ஒருங்கிணைத்து சி சி டி வி பொருத்தப்பட்டு குறைகள் இருந்தால் சரி செய்யப்பட்டு வருகின்றன .
5 ஆயிரம் திருக்கோவில்களில் திருப்பணிக்காக 100 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் 290, புதுக்கோட்டை 270, கன்னியாகுமரி 400 மேற்பட்ட தேவஸ்தானங்களுக் கு அரசு மானியம் வழங்கப்பட்டு வருகின்றன. திருக்கோவில் புனரமைப்பு செய்ய அதிக அளவில் தொகை ஒதுக்கப்பட்டது. திமுக ஆட்சி ஏற்பட்ட பின் 5000 கோடி ரூபாய் மேல் கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
காய்ச்ச மரம் தான் கல்லடி படும்
தொடர்ந்து பேசியவரிடம் மத்திய அமைச்சர் கோயில் தொடர்பாக பேசிய கருத்து தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், காய்ச்ச மரம் தான் கல்லடி படும் என்பார்கள். தமிழகத்தை பொறுத்தவரை மத்திய அரசு நகர்த்தும் காய் இந்துக்களுக்கு எதிரான ஆட்சி இது என்பது தான். இதுவரை செய்யப்படாத பல்வேறு சாதனைகள் திமுக ஆட்சி அமைந்த பின் தான் இந்து சமய அறநிலையத்துறையில் நடந்தது. வாய் புளித்ததோ , மாங்காய் புளித்ததோ என்ற வகையில் அதிகாரத்தில் இருப்பவர்கள் பேசுவது சரி அல்ல.
8001 திருக்கோவில்களுக்கு மாநில தொல்லியல் துறை அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் எல்லாம் 1000 கோவில்களுக்கு தான் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை நிரூபித்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் நேரடியாக கேட்கவும், அதற்கு பதில் அளிக்கவும் இந்த துறை தயாராக உள்ளதாக தெரிவித்தார்.