அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை நடத்திய விவகாரம் எனக்கு தெரியாது, பேச்சுவார்த்தையின் போது நான் உடன் இருந்ததாக வரும் தகவல் பொய்யானது என சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டெல்லி சென்று வந்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், 33 சதவீத மகளிர் இட ஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமருக்கு பாராட்டு விழா நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காகவே டெல்லி சென்று இருந்தேன். 

அதிமுகவினர் பேச்சுவார்த்தை நடத்தும் போது நான் உடன் இருந்ததாக தவறான செய்தியை சில ஊடகங்கள் வெளியிட்டிருந்ததாக தகவல்கள் வந்தது, நேற்று மாலை முழுவதும் டெல்லியில் கட்சி பணிகளில் தான் இருந்தேன். நான் அங்கு வேறு எந்த விசயத்திலும் ஈடுபடவில்லை. மேலும் தொலைக்காட்சி செய்தியை பார்த்தும், பிறர் சொல்லியும் தான் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டெல்லி வந்ததை தெரிந்து கொண்டேன்.

வரும், ஆனா வராது; மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மகளிருக்கான 33% இடஒதுக்கீடு குறித்து அமைச்சர் விமர்சனம்

அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியதும் எனக்கு தெரியாது. நான் பேச்சுவார்த்தையின் போது உடன் இருந்ததாக சொல்வது முற்றிலும் தவறான கருத்து. பா.ஜ.க மகளிர் அணி தலைவராக பிரதமரின் பாராட்டு விழாவை முன்னின்று நடத்துவது தொடர்பாகவே டெல்லி சென்றேன். கூட்டணி தொடர்பான விவகாரங்களில் தேசிய தலைமை மட்டுமே முடிவு எடுக்கும் என தெரிவித்தார்.