விரைவில் சுயஉதவிக்குழு & கல்விக்கடன் தள்ளுபடியா..? 'குட்' நியூஸ் சொன்ன அமைச்சர் நேரு !
தமிழகத்தில் மகளிர் சுய உதவிக்குழு கடனை தமிழக அரசு ஓரிரு நாட்களில் தள்ளுபடி செய்து அறிவிக்கப்படும் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திமுக அரசு கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், 5 லட்சத்துக்கும் கீழ் வைக்கப்பட்டுள்ள அனைத்து நகைக்கடன்களும் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. இதன் கீழ் வரும் வாடிக்கையாளர்களின் பட்டியலையும் தயாரித்து, தங்க நகைக்கடன் தள்ளுபடி செய்வதற்கான செயலிலும் அரசு செய்து வருகிறது. நகைக் கடன் தள்ளுபடி அறிவிப்பு குறித்து தகுதியான நபர்களை கண்டறிவதற்காக தகவல்கள் சேகரிக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
ஒரு குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் பெற்ற அனைத்து நகைக் கடன்கள் பற்றிய பெயர், கடன் பெற்ற கூட்டுறவு சங்கங்களின் விவரம், கடன் பெற்ற நாள், கடன் தொகை, கடன் கணக்கு எண், வாடிக்கையாளர் தகவல் குறிப்பு எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண்,முகவரி, அலைபேசி எண் உள்ளிட்ட 51 விதமான தகவல்களை சேகரித்து, தொகுக்கப்பட்டு கணினி மூலம் விரிவான பகுப்பாய்வு செய்யவும் நகைக்கடன் தள்ளுபடி பெறும் பயனாளிகளின் பட்டியலை இறுதி செய்ய அறிவுரைகள் வழங்கி கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.
2021ஆம் ஆண்டு பயிர் கடன் தள்ளுபடி பெற்றவர்கள், குடும்ப அட்டையின் படி இடம்பெற்றுள்ள குடும்பத்தினர் நகை கடன் தொகை முழுமையாக செலுத்தியவர்கள், 40 கிராமுக்கு மேற்பட்ட நகை கடன் பெற்ற குடும்பத்தினருக்கு தள்ளுபடி செய்யப்படாது என அறிவிக்கப்பட்டது. 40 கிராமுக்கு மேற்பட்டு நகைக்கடன் பெற்றவர்கள், கூட்டுறவு சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர், கூட்டுறவு சங்கங்களில் உள்ள நிர்வாக குழு உறுப்பினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர் ஆகியோருக்கு தள்ளுபடி இல்லை என்று அறிவிக்கப்பட்டது.
மேலும் குடும்ப அட்டை எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள், ஆதார் எண்ணை வழங்காதவர்கள் மற்றும் தவறாக வழங்கியவர்கள் , எந்த பொருளும் வேண்டாத குடும்பத்தினர், ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் மொத்த எடை 40 கிராமுக்கு கூடுதலாக பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் ஆகியோருக்கு நகைக்கடன் தள்ளுப்படி இல்லை என்று அறிவிக்கப்பட்டது. பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிருப்தி ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் திருச்சியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். பின்னர் விழா மேடையில் பேசிய அவர் மகளிர் சுய உதவிக்குழு கடன்களை அரசே ஏற்று தள்ளுபடி செய்ய இருப்பதாகவும், இதுதொடர்பான அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றும் தெரிவித்தார். மேலும், கல்விக்கடன்களை தள்ளுபடி செய்வது தொடர்பாக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். இந்த செய்தி பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.