மேகாலயா மாநிலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டென்னிஸ் வீரர் விபத்தில் பலியான சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

83வது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக தீனதயாளன் மற்றும் 3 வீரர்கள், அசாம் மாநிலம் கவுகாத்தியில் இருந்து காரில் ஷில்லாங் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். ஷாங்பங்க்ளா என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் டிவைடரை தாண்டி வந்து கார் மீது மோதியது. இதில், கார் டிரைவர் மற்றும் தீனதயாளன் ஆகிய இருவரும் உயிரிழந்தனர். மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அவர்களுக்கு ஷில்லாங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தீனதயாளனின் உடல் நாளை காலை சென்னைக்கு விமானம் மூலம் கொண்டு வரப்படுகிறது. தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பதக்கங்கள் வென்றுள்ள தீனதயாளன், வரும் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்க இருந்தார்.

இதனையடுத்து தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'தமிழ்நாட்டின் நம்பிக்கைக்குரிய இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வ தீனதயாளனின் மரணம் வார்த்தைகளில் விவரிக்க முடியாத அதிர்ச்சி அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்' என்று இரங்கல் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். 

தீனதயாளன் மறைவுக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு தலைவர் துஷ்யந்த் சவுதாலா இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், அவரது குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.