கருணாநிதியை விட மோசமானவர் மு.க.ஸ்டாலின்- சி.வி சண்முகம் ஆவசேம்
ஆளத் தெரியாத முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிற மு.க.ஸ்டாலின், அவரது தந்தை எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதைவிட ஒரு படி மேலாக சென்று நடந்து கொள்கிறார் என முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் விமர்சித்துள்ளார்.
திமுகவின் பழி வாங்கும் நடவடிக்கை
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சி.வி சண்முகம் சென்னை அடையாரில் உள்ள முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெறும் இடத்திற்கு வந்தார். அப்போது காவல்துறை அதிகாரிகளோடு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்துவதாக விமர்சித்த அவர் இது ஒரு பழி வாங்கும் நடவடிக்கை என்றும் குற்றம்சாட்டினார். ஏற்கனவே இரண்டு முறை சோதனை நடத்தினார்கள் ஆனால் எந்த ஆவணமும் கைப்பற்ற முடியாத நிலையில், இன்று மீண்டும் புதிதாக வழக்குகளை இவர்கள் மீது போடப்பட்டு சோதனை என்ற பெயரிலேயே இந்த அரசு எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கி ஒழிக்கலாம் என்றும் நினைப்பதாக தெரிவித்தார். ஆளத் தெரியாத முதலமைச்சராக செயல்பட்டுக் கொண்டிருக்கிற முக.ஸ்டாலின், அவரது தந்தை எப்படி பழிவாங்கும் போக்கை தொடர்ந்தாரோ, அதைவிட ஒரு படி மேலாக சென்று இவர் நடந்து கொள்கிறார் என்று விமர்சித்தார்.
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் ரெய்டு.. என்ன காரணம் தெரியுமா? எஃப்ஐஆரில் பரபரப்பு தகவல்.!
உதயநிதி பட டிக்கெட்டை விற்கும் அமைச்சர்
இன்றைக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்களை வழக்குகள் போட்டு அடக்கி விடலாம் என்று இந்த அரசு தப்பான கணக்கை போட்டுக் கொண்டிருக்கிறது என்றும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மு க ஸ்டாலின் தேர்தல் நேரத்தில் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு திறமை இல்லாத ஸ்டாலின் அரசு, மக்களை திசை திருப்புவதற்காகவே இது போன்ற சோதனைகளை நடத்துவதாக குற்றம் சாட்டினர். திமுக ஆட்சி பொறுப்பேற்று 15 மாதங்களிலேயே அனைத்து விலைவாசியும் உயர்ந்திருக்கிறது, 105 சதவீதம் சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது, கொரோனா காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்க மக்களுக்கு பல்வேறு சலுகைகள் அளித்து எடப்பாடி அரசு ஆட்சி நடத்தினார்கள், ஆனால் கொரோனாவில் இருந்து மீண்டு வந்து கொண்டிருக்கும் மக்களை மீண்டும் இந்த அரசு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றும் பால் விலை, கட்டுமான பொருள், சொத்துவரி, மின் கட்டணம் ஆகியவை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது, என்றும் மக்களை இன்றைக்கு வஞ்சித்திருக்கிறார் பழி வாங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் தெரிவித்தார். மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்க திமுக அரசுக்கு திராணியில்லை. பள்ளி கல்வித்துறை அமைச்சரோ உதயநிதியின் ரசிகர் மன்றத்துடன் தியேட்டர்களுக்கு சென்று டிக்கெட் விற்று கொண்டிருக்கிறார்.
வீட்டை சுற்றி வளைத்த போலீஸ்.. கைதாகிறார் எஸ்.பி.வேலுமணி..? அதிர்ச்சியில் எடப்பாடி
மத்திய அமைச்சர் மீதும் நடவடிக்கையா?
சுகாதாரத்துறை அமைச்சர் மீது வழக்கு போட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது, ஒரு மருத்துவ கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுத்தது முறையாக கொடுக்கவில்லை என்கிறார்கள் என்றும் மருத்துவக் கல்லூரிக்கு அங்கீகாரம் கொடுப்பது மாநில அரசாங்கம் இல்லை என்றும் வெறும் தடையில்லா சான்று மட்டும் தான் மாநில அரசாங்கம் கொடுக்கின்ற கடமை என்று கூறிய அவர் மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா தான் ஆய்வு செய்து முறையான அனுமதி கொடுக்கும் என்றும் மெடிக்கல் கவுன்சில் ஆப் இந்தியா மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை இந்த வழக்கில் சேர்த்து உள்ளார்களா என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படியுங்கள்
எஸ் பி வேலுமணி வீட்டில் ரெய்டு.. எதிர்ப்பு தெரிவித்த 7 அதிமுக எம்எல்ஏக்கள் குண்டுகட்டாக கைது