2024இல் பாஜகவுக்கு தோல்வி உறுதி.. திரும்பவும் பாஜக ஆட்சிக்கு வராது.. கொந்தளிக்கும் மம்தா பானர்ஜி.!
2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சியில் அமைச்சராக இருக்கும் மூத்த அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி ஆசிரியர்கள் பணியிடங்களில் முறைகேடு செய்ததாகப் புகார் எழுந்தது. அவருக்கு நெருக்கமானவர்களின் இடங்களில் நடத்திய சோதனைகளில் பார்த்தா சாட்டர்ஜியின் உதவியாளர் வீட்டிலிருந்து பெட்டி பெட்டியாக பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்தப் பெட்டிகளில் சுமார் ரூ.20 கோடி இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக பார்த்தா சாட்டர்ஜி கைது செய்யப்பட்டுள்ளார். பார்த்தா சாட்டர்ஜியால் மம்தா அரசுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்து திரிணாமூல் காங்கிரஸ் மீது கடும் விமர்சனங்களை வைத்து வருகிறது.
இதையும் படிங்க: அர்பிதா முகர்ஜிக்கு சொந்தமான மற்றொரு குடியிருப்பில் ரூ.15 கோடி பறிமுதல்… அமலாக்கத்துறை அதிரடி!!
இந்நிலையில் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சி பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறுகையில், “திரிணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக தீய நோக்கத்துடன் பிரசாரங்கள் செய்யப்படுகின்றன. ஒருவர் குற்றம் செய்ததாக நிரூபிக்கப்பட்டால் நீதிமன்றம் அவரைக் கண்டிப்பாக தண்டிக்கட்டும். ஆனால், புலனாய்வு அமைப்புகள் அரசியல் கட்சிகளுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் நோக்கில் பயன்படுத்தப்படக் கூடாது. நீங்கள் ஒரு பெரிய நிறுவனத்தை நடத்துகிறீர்கள். அதில், சில தவறுகள் நடக்கலாம். யாராவது ஏதாவது ஒரு தவறை செய்துவிட்டால் அது சட்டப்படி நிரூபிக்கப்பட்டால், அவர்கள் கண்டிப்பாகத் தண்டிக்கப்பட வேண்டும்.
இதையும் படிங்க: rahul: அரசரே! கேள்விக்கு ஏன் பயப்படுகிறீர்கள்?: பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி
அந்த விஷயத்தை வைத்து தீய நோக்கத்துடன் பிரசாரம் செய்வதைத்தான் நான் எதிர்க்கிறேன். மத்தியில் உள்ள ஆளுங்கட்சியான பாஜகவால் எதிர்க்கட்சி தலைவர்களும் தொழிலதிபர்களும் விசாரணை அமைப்புகளால் அச்சுறுத்தப்படுகிறார்கள். விசாரணை அமைப்புகள் எந்தச் சார்பும் இல்லாமல் நடந்து கொண்டால் எனக்கு அதில் பிரச்னை கிடையாது. நாடாளுமன்றத்தில் இதையெல்லாம் எதிர்த்து கேள்வி எழுப்பினால், இடைநீக்கம் செய்து விடுகிறார்கள். 2024-ஆம் ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தோல்வி அடையும். நான் எண்ணிக்கையைப் பற்றியும் கூற முடியும். அதனால், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வராது என்பதை உறுதியாக சொல்வேன்” என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
இதையும் படிங்க: ED: Enforcement: அமலாக்கப்பிரிவு ரெய்டு நடத்துவது 8 ஆண்டுகளில் 27 மடங்கு அதிகரித்துள்ளது: மத்திய அரசு தகவல்