சசிகலாவுக்கு ஆதரவு.. வசமாக சிக்கிய செல்லூர் ராஜு.. இது என்ன புது சோதனை ?
மதுரை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களுடன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை நேற்று சந்தித்தார்.
ஒற்றை தலைமை :
சசிகலா வந்தால்தான் கட்சி இயல்பு நிலைமைக்கு திரும்பும் என்று முக்கிய நிர்வாகிகளே வாய்விட்டு சொல்ல ஆரம்பித்துவிட்டனர். மற்றொரு பக்கமும் ஒற்றை தலைமை என்ற முழக்கமும் எதிரொலித்து வருகிறது.சசிகலாவை மட்டும் சேர்க்க கூடாது என்ற எண்ணத்தில் இதுவரை எடப்பாடி பழனிசாமி உறுதியாக இருந்து வருகிறார். சொந்த தம்பியை கட்சியில் இருந்து நீக்கியதை பார்த்தால், ஓபிஎஸ்ஸும் சசிகலா குறித்து எந்த முடிவையும் வெளிப்படையாக அறிவிக்க தற்போது வரை தயாரில்லை என்றே யூகிக்க முடிகிறது.
திமுகவின் கைது நடவடிக்கை பாய உள்ளதால், இந்த நிசப்தமா? அல்லது சசிகலாவுக்கான சிக்னலா? என்று தெரியவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமியை தன் பக்கம் கொண்டு வரும் அனைத்து முயற்சிகளையும் சசிகலா எடுத்து கொண்டுதான் இருக்கிறாராம். ஓபிஎஸ் - இபிஎஸ் இடையே கருத்து மோதல்களும், அதிருப்திகளும் அதிகமாகி கொண்டே வருகிறது.
செல்லூர் ராஜு சந்திப்பு :
தன்னை வழக்கம்போல், கட்சியில் இருந்து எடப்பாடி பழனிசாமி ஓரங்கட்டி விடுவாரோ, அதனால்தான் ஒற்றை தலைமை தான் வேண்டும் என்ற பேச்சை அவராகவே கட்சிக்குள் கிளப்பி விட்டு வருகிறாரோ? என்பன போன்ற சந்தேகங்கள் ஓபிஎஸ்ஸுக்கு நிறையவே எழுந்துள்ளன. இந்நிலையில், ஓ.பன்னீர் செல்வத்தின் பெரியகுளம் பண்ணை வீட்டில் அவரை சந்தித்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மற்றும் அவருடன் மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் வாழ்த்து பெரும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில் பேசியர் செல்லூர் ராஜு, 'நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு காரணம் திமுகவின் பண பலம், அதிகார பலம் உள்ளிட்ட காரணங்களால் தற்காலிகமாக அதிமுகவின் வெற்றியை தட்டிப் பறித்துள்ளனர். அதனால் சோர்வடைய வேண்டாம். அந்த சூழ்நிலையிலும் வெற்றி பெற்ற நீங்கள் மக்களின் அடிப்படைத் தேவைகளை உணர்ந்து பாகுபாடின்றி அனைவருக்கும் மக்கள் பணியாற்றிட வேண்டும். மக்கள் மத்தியில் நன்மதிப்பைப் பெற்று மென்மேலும் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் வளர மக்களுக்கு தங்களால் முடிந்த பணிகளை ஆற்றிட வேண்டும்' என்று பேசினார்.
தடுமாறிய செல்லூர் ராஜு :
பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், 'மதுரை மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி, பேரூராட்சிகளில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் அனைவரும் நாளை மதியம் தமிழக எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளனர். அதிமுகவில் சசிகலா மற்றும் தினகரன் இணைப்பது குறித்து ஓபிஎஸ் சகோதரர் கோரிக்கை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கேட்கிறீர்கள்.
இந்த விவகாரத்தில் அதிமுகவின் தலைமை எடுக்கும் முடிவு தான் முக்கியம். நான் இதில் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை என ஏற்கனவே தெரிவித்துள்ளேன்' என்று கூறினார். செல்லூர் ராஜு ஓ.பி.எஸ்சிடம் வாழ்த்து பெற வந்ததாக வெளிப்படையாக கூறினாலும், நிஜத்தில் சசிகலாவை அதிமுகவில் இணைக்குமாறு வலியுறுத்தவே தனது ஆதரவாளர்களுடன் வந்ததாகவே கூறப்படுகிறது.