விரைவில் மாநாடு.. அதுவரை போராட்டம்.. புகழேந்தி,ஓ ராஜா திடீர் முடிவு.. ஓபிஎஸ் - இபிஎஸ் அதிர்ச்சி
சசிகலாவை அதிமுகவில் சேர்க்க வலியுறுத்தி வரும் கட்சியின் அதிருப்தி நிர்வாகிகள் புகழேந்தி, ஆவின் வைத்தியநாதன், ஓ ராஜா,அன்வர் ராஜா ஆகியோர் சென்னையில் அவசர ஆலோசனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிமுக படுதோல்வி :
நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகளுக்கு பிறகு அதிமுக தலைமையில் மாற்றம் வேண்டும் என்ற குரல் பல்வேறு மாவட்டத்தில் ஒலிக்க தொடங்கியது. இதனிடையே அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ.பன்னீர்செல்வம் தம்பி ஒ.ராஜா, சசிகலாவை சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.
இந்த நிலையில் நேற்று அதிமுக கட்சியிலிருந்து நீக்கப்பட்ட புகழேந்தி, அன்வர் ராஜா, ஒ.ராஜா மற்றும் நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய புகழேந்தி, ‘காரணமில்லாமல் நீக்கப்பட்ட நான், அன்வர் ராஜா, ஓ.ராஜா அனைவரும் வருங்காலத்தில் அதிமுகவை எப்படி எடுத்துச் செல்வது எல்லோரையும் எப்படி ஒருங்கிணைப்பது குறித்து ஆலோசித்தோம்.
விரைவில் மாநாடு :
சசிகலாவை எப்படி ஒருங்கிணைந்து கட்சியை கொண்டு செல்ல வேண்டும் எனவும் ஆலோசித்தோம். ஓபிஎஸ் இபிஎஸ் இருவரும் சேர்ந்து முடிவுகள் எடுக்கின்றனர். இவர்களால் ஆயிரக்கணக்கான பேர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அனைவரையும் ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ளோம். அத்துணை பேரையும் ஒருங்கிணைத்து ஒரு அணியாக மாநாடு விரைவில் போட உள்ளோம். அதேபோல் இபிஎஸ் ஓபிஎஸ் எதிர்த்து ஆர்ப்பாட்டம் அனைத்து இடங்களிலும் தொடரும்.
எடப்பாடி பழனிசாமியை நீக்கினால்தான் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட முடியும். ஈபிஎஸ் சொல்வதை கேட்டுக் கொண்டு ஓபிஎஸ் ஜால்ரா தட்டி வருகிறார். ஓபிஎஸ்-யிடம் நல்ல மனமும் இல்லை குணமும் இல்லை. எல்லோரும் இணைந்து சசிகலாவை ஏற்றுக்கொண்டால் எங்களுக்கு மாற்றுக் கருத்து இல்லை.
ஓபிஎஸ்-ஐ திட்டியும் பயனில்லை, குறை சொல்லியும் பயனில்லை, நேரம்தான் வேஸ்ட். இபிஎஸ் தான் அனைத்தையும் செயல்படுத்துகிறார். இரண்டு பேர் இணைந்து நாடகமாடுகிறார்கள். அடுத்ததாக என்ன செய்ய வேண்டும், சட்டரீதியாக என்ன செய்யவேண்டும், எப்படி ஒன்றிணைய வேண்டும் போன்றவை ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதிமுக-வை காப்பதற்கு எல்லோரும் திரண்டு வர வேண்டும் என தெரிவித்தார்.