மேற்கு வங்கத்தில் குடியரசுத்தலைவருக்கான பாதுகாப்பு மரபுகள் மீறப்பட்டது குறித்து இன்று மாலைக்குள் விளக்கம் அறிக்கை அளிக்கும்படி மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நேற்று (பிப்ரவரி 7) மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் நடைபெற்ற சர்வதேச சாந்தல் மாநாட்டில் கலந்து கொண்டார். அப்போது அவர் மேற்கு வங்க அரசு Protocol விதிமுறைகளை முற்றிலுமாக மீறி விட்டதாக பரபரப்பு குற்றம்சாட்டினார். அதாவது மேற்கு வங்க அரசு இந்த மாநாட்டை டார்ஜிலிங் மாவட்டத்தின் பிதான்நகரிலிருந்து, சிலிகுரி அருகிலுள்ள கோசைன்பூர் பகுதிக்கு மாற்றியது.
குடியரசுத் தலைவர் வேதனை
இது குறித்து பேசிய திரௌபதி முர்மு, ''இவ்வளவு பெரிய இடவசதி இருந்தும் குறுகலான இடத்தில் மாநாடு ஏன் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு 5 லட்சம் பேர் வரை கூடியிருக்க முடியும். இதன் காரணமாக இந்த விழாவில் பல சாந்தல் சமூக மக்கள் கலந்து கொள்ள முடியாமல் போனது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது'' என்றார். மேலும் குடியரசுத் தலைவர் ஒரு மாநிலத்திற்கு வரும்போது அந்த மாநில முதலமைச்சர் அல்லது அமைச்சர்கள் அவரை வரவேற்பது மரபாகும்.
குடியரசுத் தலைவரை யாரும் வரவேற்கவில்லை
ஆனால் குடியரசுத் தலைவர் நேற்று மேற்கு வங்கம் சென்றபோது, அவரை முதல்வர் மம்தா பானர்ஜியோ, அமைச்சர்களோ வரவேற்காதது பெரும் அதிர்ச்சியை அளித்தது. இது குறித்தும் குடியரசுத் தலைவர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார். ''மம்தா எனது தங்கை போன்றவர். அவர் என் மீது ஏன் கோபமாக இருக்கிறார் என்று தெரியவில்லை'' என்று கூறியிருந்தார்.
பிரதமர் மோடி கண்டனம்
குடியரசுத் தலைவரை மேற்கு வங்க அரசு அவமதித்து விட்டதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது. இது தொடர்பாக மேற்கு வங்க அரசுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்த பிரதமர் மோடி, ''திரிணாமுல் காங்கிரஸ் அரசின் இந்த செயல் வெட்கக்கேடானது. இதுவரை நடக்காத ஒன்று. பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஒரு குடியரசுத் தலைவரை மாநில அரசு அவமதித்து இருக்கிறது. அரசியலமைப்புச் சட்டத்தின் உயரிய பதவியில் இருப்பவர்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும்'' என்றார்.
விளக்கம் அளிக்க உள்துறை அமைச்சகம் உத்தரவு
மேற்கு வங்கத்தில் குடியரசுத்தலைவருக்கான பாதுகாப்பு மரபுகள் மீறப்பட்டது குறித்து இன்று மாலைக்குள் விளக்கம் அறிக்கை அளிக்கும்படி மேற்கு வங்க அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி குற்றச்சாட்டுகளுக்கு விளக்கம் அளித்துள்ள மம்தா பானர்ஜி, குடியரசுத் தலைவருக்கான மரபுகள் மீறப்படவில்லை என்றும் தேர்தல் நேரத்தில் பாஜக அரசியல் லாபம் தேட முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
மம்தா பானர்ஜி விளக்கம்
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மம்தா பானர்ஜி, ''குடியரசுத் தலைவர் செயலகம் வழங்கிய பட்டியலின்படியே அவருக்கான வரவேற்பு மற்றும் வழிஅனுப்புதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. மேயர் மற்றும் மாவட்ட ஆட்சியர் முறைப்படி குடியரசுத் தலைவரை வரவேற்றனர். இதில் எந்த விதிமுறை மீறலும் இல்லை. பாஜக குடியரசுத் தலைவரைத் தனது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துகிறது. தேர்தலை மனதில் வைத்து பிரச்சனை செய்ய முயற்சிக்கிறது'' என்றார்.


