தேசிய தலைநகரான புதுடெல்லி உள்ளிட்ட வடமாநில நகரங்களை விட, தென்னிந்தியாவில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு போன்ற நகரங்களில் வசிக்கவும், வேலை செய்யவும் பெண்கள் விரும்புவதாக ஒரு ஆய்வில் தெரிய வந்துள்ளது. முதல் பத்து இடங்களில் சென்னை, கோவை, மதுரை இடம் பெற்றுள்ளன.
பெண்களால் விரும்பப்படும் பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் முதல் 10 நகரங்களாக சென்னை, புனே, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை, அகமதாபாத், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகியவை இடம் பெற்றுள்ளன.
பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட சிறிய நகரங்கள் பட்டியலில் திருச்சி, வேலூர், ஈரோடு, சேலம், திருப்பூர், புதுச்சேரி, சிம்லா, மங்களூரு, திருவனந்தபுரம் மற்றும் பெலகாவி ஆகியவை இடம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டில் இருந்துதான் அதிகமான நகரங்கள் இந்த விருப்பப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. பத்து லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களில் சென்னை 78.41 மதிப்பெண்களுடன் முதல் இடத்தில் உள்ளது. சிறிய நகரங்கள் பட்டியலில் திருச்சி 71.61 மதிப்பெண்களுடன் முதலிடத்திலும் உள்ளது.
தமிழ்நாட்டின் மூன்று நகரங்கள் முதல் 10 இடங்களில் உள்ளன. அதே நேரத்தில் பத்து லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்களில், முதல் ஐந்து நகரங்கள் அனைத்தும் தென் மாநிலத்தைச் சேர்ந்தவையாக உள்ளன.

14வது இடத்தில் டெல்லி:
புது டெல்லி 41.36 மதிப்பெண்களுடன் 14 வது இடத்தில் உள்ளது. முதல் நகரத்துடன் ஒப்பிடுகையில் இது 30 புள்ளிகள் குறைவாக உள்ளது. பெண்களுக்கான முதல் 10 நகரங்களில் டெல்லி இடம் பெறாதது ஆச்சரியமான ஒன்று இல்லை என்று ஆய்வு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பல மாநிலங்களின் தலைநகரங்கள் இரண்டு பிரிவுகளிலும் முதல் 25 இடங்களுக்குள் இடம் பெறவில்லை. முதல் 25 இடங்களில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், டெல்லி, கேரளா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் ஒடிசாவைச் சேர்ந்த நகரங்கள் இடம் பெற்றுள்ளன. பெரும்பாலான மாநில தலைநகரங்கள் பொதுவாக அரசியல், சமூக-பொருளாதாரம், சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துகின்றன என்று ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நகரங்கள் அடுக்கு-1, 2, 3 அடிப்படையில் 111 நகரங்களில் 783 பெண்களிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பெண்களின் வாழ்க்கை வசதி, பாதுகாப்பு மற்றும் நகர வசதிகள் உள்ளிட்ட சமூக உள்ளடக்க அம்சங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பன்முகத்தன்மை, சமத்துவம் குறித்த ஆய்வுகளை மேற்கொள்ளும் அவ்தார் 'வியூபோர்ட் 2022 - இந்தியாவில் பெண்களுக்கான சிறந்த நகரங்கள்' என்ற தலைப்பில் ஆய்வு மேற்கொண்டது. அதன் அறிக்கையில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை எழுந்ததும் எதை சாப்பிடணும்.. முதல்ல சிறந்த காலை உணவை பத்தி தெரிஞ்சுக்கங்க.
