புது செருப்பு அல்லது ஷூக்கள் அணியும் போது உங்களது காலை பதம் பார்த்துவிடுகிறதா? அதிலிருந்து விடுபட உதவும் சில வீட்டு வைத்தியங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

நம் ஆசை ஆசையாக வாங்கிய ஷூக்கள் அல்லது செருப்புகள் சில சமயங்களில் நமக்கே எமனாக மாறிவிடும். புதிதாக வாங்கிய காலணிகளை அணியும் போது அந்த இடத்தில் புண்கள், கொப்புளங்கள், வலி, சிவதல் போன்றவற்றை ஏற்படுத்தும். இது ஒரு சாதாரண விஷயமாக இருந்தாலும் மிகவும் அசெளகரியத்தையும், சில சமயங்களில் நடக்க முடியாமல் கூட போகலாம்.

இது தவிர இறுக்கமான மற்றும் மோசமான காலணிகள் குதிகால் வலியை ஏற்படுத்தும். அதுபோல தரமற்ற மற்றும் கடினமான பொருட்களால் செய்யப்பட்ட காலணிகளை அணியும்போது உராய்வு, பாத வெடிப்பு மற்றும் அலர்ஜியை ஏற்படுத்தும். ஆசை ஆசையாக வாங்கிய காலணிகள் இப்படி மோசமாக இருந்தால் நீண்ட நாட்கள் பயன்படுத்த முடியாது. அதை தூக்கி எறியவும் மனசும் வராது. ஆகவே, புது செருப்பு அல்லது ஷூக்களால் காலில் ஏற்பட்ட புண்ணை குணப்படுத்த சில வீட்டு வைத்தியங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன. அவை என்ன என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

புது செருப்பால் ஏற்பட்ட புண்ணை குணப்படுத்த வீட்டு வைத்தியங்கள்:

1. தேங்காய் எண்ணெய்:

புது காலணிகள் கடிக்கும் பகுதியில் தேங்காய் எண்ணெய் தடவினால் கால்களில் ஏற்படும் உராய்வு குறையும். மேலும் வலியும் ஏற்படாது.

2. வாஸ்லின் :

புது செருப்பு உங்கள் காலில் எந்த பகுதியில் கடிக்கிறதோ அந்த இடத்தில் வாஸ்லின் தடவ வேண்டும். இது காலனிக்கும் இடையே ஏற்படும் உராய்வை குறைக்கும்.

3. உருளைக்கிழங்கு:

புது செருப்பு கடிக்கும் இடத்தில் ஒரு மெல்லிய உருளைக்கிழங்கு துண்டை நன்றாக தேய்க்க வேண்டும். உருளைக்கிழங்கில் இயற்கையாகவே குளிர்ச்சனை பண்புகள் உள்ளதால் இது காலில் எரிச்சல் மற்றும் வலியை போக்கும்.

4. கற்றாழை ஜெல்:

புது செருப்பால் பாதிக்கப்பட்ட பாதத்தில் கற்றாழை ஜெல்லை தடவி, சிறிது நேரம் அப்படியே வைத்துவிட்டு பிறகு சாதாரண தண்ணீரில் கழுவ வேண்டும். இதை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். கற்றாழை ஜெல்லில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் மற்றும் குணப்படுத்தும் பண்புகள் உள்ளன. இதனால் காலில் கொப்புளங்கள், புண் இருந்தால் விரைவில் குணமாகும்.

5. வேப்பிலை மற்றும் மஞ்சள்:

ஒரு கைப்பிடி வேப்பிலையை பேஸ்ட் போலாக்கி அதனுடன் மஞ்சள் கலந்து செருப்பு கடித்த இடத்தில் அந்த பேஸ்ட்டை தடவ வேண்டும். நன்கு காய்ந்த பிறகு சாதாரண நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை தினமும் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். வேப்பிலை மற்றும் மஞ்சள் தொற்று நோயை குணமாக்கும் பண்புகள் உள்ளன.

6. ஐஸ் ஒத்தகம்;

புது செருப்பால் காலில் வலி, வீக்கம் ஏற்பட்டால் ஒரு சுத்தமான துணியில் ஐஸ் கட்டி வைத்து அதை வலியுள்ள இடத்தில் மெதுவாக ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படி நீங்கள் செய்வதன் மூலம் ரத்த நாளங்கள் சுருங்கி வீக்கம் மற்றும் வலி உடனடியாக குறைந்து விடும்.