ஐபிஎல் 2020: என்னோட பேட்டிங் ஆர்டரில் அவருதான் இறங்கணும்..! ரெய்னா அதிரடி
ஐபிஎல்லில் சிஎஸ்கே அணியில், தான் இறங்கிவந்த 3ம் வரிசையில் யார் ஆட வேண்டும் என்று தனது ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசன் வரும் 19ம் தேதி தொடங்கவுள்ளது. அனைத்து அணிகளும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றன. இந்நிலையில், சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரரும், அந்த அணியின் மேட்ச் வின்னர்களில் ஒருவருமான ரெய்னா, அணி நிர்வாகத்துடனான கருத்து வேறுபாட்டால், இந்தியா திரும்பினார். பின்னர் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக ஆட ஆர்வம் தெரிவித்தார். ஆனாலும் அவர் இந்த சீசனில் ஆடுவாரா இல்லையா என்பது தெரியவில்லை.
சிஎஸ்கே அணியில் 2008ம் ஆண்டிலிருந்து ஆடிவரும் ரெய்னா, அந்த அணிக்காக பல சிறப்பான இன்னிங்ஸ்களை ஆடி வெற்றிகளை பெற்றுக்கொடுத்துள்ளார். அந்த அணியின் செல்லப்பிள்ளையாகவே இருந்துவந்தார். ஐபிஎல்லில் அதிகமான போட்டிகளில் ஆடிய வீரர் என்ற பெருமைக்குரியவரான ரெய்னா, ஐபிஎல்லில் 137.14 என்ற ஸ்டிரைக் ரேட்டுடன் 5368 ரன்களை குவித்து, ஐபிஎல்லில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலிக்கு அடுத்து இரண்டாமிடத்தில் உள்ளார்.
ரெய்னாவின் இழப்பு சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய இழப்பு. எனவே ரெய்னா இறங்கிய 3ம் வரிசையில் யாரை இறக்கலாம் என்று பலரும் ஆலோசனை தெரிவித்துவருகின்றனர். கவுதம் கம்பீர், தோனி 3ம் வரிசையில் இறங்கலாம் என்றார். இது தோனிக்கு கிடைத்த மிகச்சிறந்த வாய்ப்பு என்றும் தெரிவித்திருந்தார். இதுகுறித்து லக்ஷ்மண் சிவராமகிருஷ்ணன் உள்ளிட்ட மேலும் சில முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துகளை தெரிவித்துவரும் நிலையில், அதுகுறித்து ரெய்னாவே பேசியுள்ளார்.
அவுட்லுக்கிற்கு அளித்த பேட்டியில், இதுகுறித்து பேசிய ரெய்னா, தோனி தான் 3ம் வரிசையில் இறங்க வேண்டும். அந்த வரிசையில் ஆடிய அனுபவம் அவருக்கு உள்ளது. தோனி 3ம் வரிசையில் இறங்கி பாகிஸ்தானுக்கு எதிராக 2005ல் அடித்த 148 ரன்களை யாராலும் மறக்க முடியாது. 3ம் வரிசை என்பது முக்கியமான பேட்டிங் வரிசை என்பதால் அந்த வரிசையில் தோனி இறங்குவதன் மூலம் அவர் நினைத்தபடி இன்னிங்ஸை ஆடமுடியும் என்று ரெய்னா தெரிவித்துள்ளார்.
தோனி இந்திய அணியில் ஆட தொடங்கிய ஆரம்பக்கட்டத்தில், நடுவரிசையில் சோபிக்காத அவரை, 3ம் வரிசையில் இறக்கிவிட்டார் அப்போதைய கேப்டன் கங்குலி. 3ம் வரிசையில் இறங்கி பாகிஸ்தானுக்கு எதிராக தனது முதல் சர்வதேச சதத்தை அடித்த தோனி, 148 ரன்களை குவித்தார். அதன்பின்னர் இலங்கைக்கு எதிராக 183 ரன்களை குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். தோனி இந்திய அணியில் 17 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே 3ம் வரிசையில் இறங்கி ஆடினார். ஆனால் அந்த 17 போட்டிகளில், 82.75 என்ற சராசரியுடன் 993 ரன்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.