எனக்கே வியப்பாதான் இருந்துச்சு.. கோலியின் திட்டத்தை முறியடித்த ஹோல்டர்..! சச்சின் அதிரடி
கோலியின் திட்டத்தை ஜேசன் ஹோல்டர் முறியடித்ததாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 13வது சீசனில் முதல் முறையாக கோப்பையை வெல்லும் முனைப்பில் களமிறங்கிய ஆர்சிபி அணி இந்த சீசனிலும் அந்த வாய்ப்பை இழந்து, எலிமினேட்டரில் சன்ரைசர்ஸிடம் தோற்று தொடரை விட்டு வெளியேறியது.
இந்த சீசனிலும் படுசொதப்பலாகவே ஆடியது ஆர்சிபி. சன்ரைசர்ஸுக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் ஆர்சிபி அணியில் ஆரோன் ஃபின்ச் இருந்தபோதிலும் கோலியே தொடக்க வீரராக இறங்கினார். ஆனாலும் ஹோல்டரின் முதல் ஓவரிலேயே(இன்னிங்ஸின் 2வது ஓவர்) கோலி ஆறு ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கோலியின் ஓபனிங் இறங்கும் திட்டம் அவருக்கும் ஆர்சிபி அணிக்கும் பலனளிக்கவில்லை.
ஆர்சிபி அணி வெறும் 131 ரன்கள் மட்டுமே அடித்தது. சன்ரைசர்ஸ் அணி அந்த இலக்கை கடைசி ஓவரில் வெற்றி பெற்றதால், தொடரை விட்டு வெளியேறியது ஆர்சிபி.
இந்நிலையில், விராட் கோலி அந்த போட்டியில் தொடக்க வீரராக இறங்கியது குறித்து பேசிய சச்சின் டெண்டுல்கர், ஹோல்டரின் ஓபனிங் ஸ்பெல் அருமையாக இருந்தது. கோலி ஓபனிங் இறங்கியது எனக்கே சர்ப்ரைஸாகத்தான் இருந்தது. இது வித்தியாசமான திட்டம்; ஆனால் அது அவருக்கு பலனளிக்கவில்லை. ஹோல்டரின் அவுட் ஸ்விங்கை எதிர்கொள்ள, பந்து பிட்ச் ஆன உடனேயே எதிர்கொண்டால், பந்தின் அதிக ஸ்விங்கை எதிர்கொள்ள தேவையில்லை என்பதால் இறங்கிவந்து பேட்டிங் ஆடினார். ஆனால் ஹோல்டர் நல்ல உயரம் என்பதால் பந்து கூடுதல் பவுன்ஸ் ஆனதால், கோலி அவுட்டாகிவிட்டார். படிக்கல்லையும் ஹோல்டர் வீழ்த்தினார். ஹோல்டர் வீழ்த்திய 2 விக்கெட்டுகள் தான் ஆட்டத்தின் திருப்புமுனையாக அமைந்தது என்றார் சச்சின் டெண்டுல்கர்.