களத்தில் கலீல் - டெவாட்டியா மோதல்.. கடுப்பான வார்னர்..! என்னதான் நடந்தது..? இதோ வீடியோ
ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராகுல் டெவாட்டியாவும் கலீல் அகமதுவும் களத்தில் மோதிக்கொண்டனர்.
ஐபிஎல் 13வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்த சீசனின் முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, அதன்பின்னர் தொடர்ச்சியாக 4 தோல்விகளை தழுவியது. எனவே வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்ட ராஜஸ்தான் ராயல்ஸ், ராகுல் டெவாட்டியா மற்றும் ரியான் பராக்கின் அதிரடியான பேட்டிங்கால் ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
துபாயில் நடந்த இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவரில் 158 ரன்கள் அடித்தது. 159 ரன்கள் என்ற கடினமில்லாத இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, 12 ஓவரில் வெறும் 78 ரன்களுக்கே பட்லர், ஸ்டோக்ஸ், ஸ்மித், சாம்சன், ராபின் உத்தப்பா ஆகிய ஐந்து முக்கியமான விக்கெட்டுகளை இழந்தது. அந்த நேரத்தில் போட்டி முழுக்க முழுக்க சன்ரைசர்ஸின் கட்டுப்பாட்டில் இருந்தது.
அதன்பின்னர் ராகுல் டெவாட்டியாவும் இளம் வீரர் ரியான் பராக்கும் இணைந்து பார்ட்னர்ஷிப் அமைத்து பொறுப்புடன் ஆடி, அணியை சரிவிலிருந்து மீட்டெடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக வெற்றியை நோக்கி அழைத்து சென்று, டெத் ஓவர்களில் அடித்து ஆடி அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தனர். மிடில் ஓவர்களில் நிதானத்தை கையாண்ட ராகுல் டெவாட்டியா, பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டெத் ஓவர்களில் அடித்து ஆடி தோல்வியை நெருங்கிய ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை பெற்று கொடுத்தார்.
மிடில் ஓவர்களில் நிதானத்தை கையாண்ட டெவாட்டியா, டெத் ஓவர்களில் தெறிக்கவிட்டார். ரஷீத் கான் வீசிய 18வது ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்தார். நடராஜன் வீசிய 19வது ஓவரில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார் டெவாட்டியா. அதனால் அந்த ஓவரில் 14 ரன்கள் கிடைத்தது. கடைசி ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 8 ரன்கள் மட்டுமே தேவைப்பட, ரியான் பராக் வின்னிங் ஷாட்டாக சிக்ஸர் விளாசினார். ராகுல் டெவாட்டியா 28 பந்தில் 45 ரன்களும், ரியான் பராக் 26 பந்தில் 42 ரன்கள் அடித்தார். ராஜஸ்தான் அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் கடைசி ஓவரை வீசிய கலீல் அகமது, வீசிய அந்த ஓவரின் நான்காவது பந்தில் ராகுல் டெவாட்டியா சிங்கிள் அடித்தார். அப்போது ரன் ஓடி முடிக்கும்போது, தோல்வி விரக்தியில் கலீல் அகமது, ராகுல் டெவாட்டியாவிடம் ஏதோ சொல்ல, கலீல் அகமதுவின் செயல்பாட்டை விரும்பாத டெவாட்டியா, அவருக்கு பதிலடி கொடுத்தார். அவர்கள் இருவருக்கு இடையே மோதல் ஏற்படவே, அடுத்த பந்தில் சிக்ஸர் அடித்து போட்டியை முடித்தார் ரியான் பராக்.
இதையடுத்து போட்டி முடிந்ததும், அம்பயரிடம் சென்று சன்ரைசர்ஸ் கேப்டன் வார்னர், ஆக்ரோஷமாக ஏதோ புகார் கூறுவதுபோல பேசிவிட்டு, பின்னர் ராகுல் டெவாட்டியாவிடம் சென்று பேசினார். கலீல் குறித்த விஷயத்தைத்தான் டெவாட்டியாவிடம் பேசினார் வார்னர். டெவாட்டியாவோ, கலீல் குறித்து வார்னரிடம் புகாரளித்தார். பின்னர் வார்னர், டெவாட்டியாவை தட்டிக்கொடுத்து அனுப்ப, அதன்பின்னர் கலீல் அகமது, டெவாட்டியாவின் தோள்மீது கைபோட்டு சமாதானமாகி சென்றனர்.