ஐபிஎல் 2020: முக்கியமான தகவலை வெளியிட்ட பிசிசிஐ
ஐபிஎல் 13வது சீசனின் பிளே ஆஃப் மற்றும் இறுதி போட்டிகளுக்கான இடம் மற்றும் கால அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது.
ஐபிஎல் 13வது சீசன் கொரோனா அச்சுறுத்தலால் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்துவருகிறது. லீக் போட்டிகள் வரும் நவம்பர் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. பிசிசிஐ லீக் சுற்றுக்கான போட்டி அட்டவணையை மட்டுமே ஆரம்பத்தில் வெளியிட்டிருந்தது.
லீக் சுற்று இன்னும் ஒரு வாரத்தில் முடிவடையவுள்ள நிலையில், பிளே ஆஃப் போட்டிகள் மற்றும் இறுதி போட்டிக்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது.
நவம்பர் 3ம் தேதியுடன் லீக் சுற்று முடிவடையும் நிலையில், முதல் தகுதிச்சுற்று போட்டி நவம்பர் ஐந்தாம் தேதி துபாயில் நடக்கிறது. லீக் சுற்றின் முடிவில் புள்ளி பட்டியலில் 3 மற்றும் 4ம் இடங்களில் இருக்கும் அணிகளுக்கு இடையேயான எலிமினேட்டர் போட்டி நவம்பர் ஆறாம் தேதி அபுதாபியில் நடக்கிறது.
முதல் தகுதிச்சுற்றில் தோற்கும் அணிக்கும் எலிமினேட்டரில் ஜெயிக்கும் அணிக்கும் இடையேயான 2வது தகுதிச்சுற்று போட்டி நவம்பர் 8ம் தேதி அபுதாபியிலும், நவம்பர் 10ம் தேதி இறுதி போட்டி துபாயிலும் நடக்கவுள்ளது.