சங்கி மட்டும் இல்லை ஆனா துரோகம், ஊழல், நாடகம் இருக்குது; வம்பு இழுத்த மஹூவா மொய்த்ரா
வெட்கப்படுதல், துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், நாடகம், திறமையற்ற, அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, சகுனி, இரட்டை வேடம் ஆகிய வார்த்தைகளை பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.
பாராளுமன்றத்தில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என்று சிலவற்றை மக்களவை செயலகம் இன்று வெளியிட்டுள்ளது. இதற்கு எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.
மக்களவை செயலகம் வெளியிட்டு இருக்கும் சிறிய புத்தகம் போன்ற அறிக்கையில், ''வெட்கப்படுதல், துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், நாடகம், திறமையற்ற, அராஜகவாதி, சகுனி, சர்வாதிகாரம், அழிவு சக்தி, சகுனி, இரட்டை வேடம், கண்துடைப்பு, கோழை, குழந்தைத்தனம், கிரிமினல், போலித்தனம், முட்டாள்தனம், பாலியல் தொல்லை, ரவுடித்தனம், லாலிபாப், கழுதை, குண்டர்கள், முதலைக் கண்ணீர், போன்ற வார்த்தைகளை பார்லிமெண்டில் பயன்படுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளது.
நடைமுறையில் பாராளுமன்றத்தில் காலம் காலமாக இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. காமன்வெல்த் பாராளுமன்றத்திலேயே இதுபோன்ற வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சபாநாயகர்கள்தான் அவையில் பயன்படுத்தக் கூடாத வார்த்தைகள் என்று கூறி பதிவில் இருந்து இந்த வார்த்தைகளை நீக்கி வருகிறார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளனர். கண்டனம் தெரிவித்து இருக்கும் காங்கிரஸ் எம்பி அபிஷேக் மானு, ''பாராளுமன்றத்தில் விமர்சனங்களை எடுத்து வைக்க முடியாவிட்டால், அதனால் என்ன பயன்?'' என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேபோல் காங்கிரஸ் பொதுச்செயலாளர்களில் ஒருவரான பிரியங்கா காந்தியும் டுவிட் செய்துள்ளார். அதில், ''ஊழலை ஊழல் என்று கூப்பிட வேண்டாம் என்று கூறுகின்றனர். மாஸ்டர்ஸ்ட்ரோக் என்று அழைக்க வேண்டுமாம். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பு செய்யப்படும், இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்று ஜூம்லா செய்தனர். இதற்கும் நாம் நன்றி கூற வேண்டுமாம்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
nirmala sitharaman: தலைமைப் பொருளாதார ஜோதிடரை நியமியுங்கள்: நிர்மலாவை வம்பிழுத்த ப.சிதம்பரம்
இவர்களிடம் இருந்து வேறுபட்டு, ''இத்தனை வார்த்தைகளை கூறியவர்கள் சங்கி என்ற வார்த்தைக்கு தடை விதிக்கவில்லை '' என்று திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா குறிப்பிட்டுள்ளார்.
பாராளுமன்றம் ஆண்டுக்கு மூன்று முறை, பட்ஜெய் கூட்டத்தொடர், மழைக்கால கூட்டத்தொடர் மற்றும் குளிர்கால கூட்டத்தொடர் என்று கூடும். நடப்பாண்டுக்கான மழைக்கால கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி முதல் ஆகஸ்ட் 12ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டுத்தான் இந்த அறிவிப்பும் இன்று வெளியாகியுள்ளது.
இந்த கூட்டத்தொடரில் மொத்தம் 18 அமர்வுகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத் தொடரிலும் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.