இது வரலாற்றுச் சிறப்பு மிக்க வெற்றி! வாக்குறுதிகளை 100% நிறைவேற்ற நான் கேரண்டி: டெல்லியில் பிரதமர் மோடி உரை!
டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சி தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி பாஜகவுக்குக் கிடைத்திருக்கும் வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது என்று கூறியுள்ளார்.
![Todays victory is historical and unprecedented: PM Modi sgb Todays victory is historical and unprecedented: PM Modi sgb](https://static-ai.asianetnews.com/images/01hgr0g5xtgj341p9szqs31bry/jd4zhzvv_363x203xt.jpg)
நான்கு மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இதுவரை யாருக்கும் கிடைக்காத வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி என்றும் ‘ஆத்மநிர்பர்’ மற்றும் ‘சப்கா சாத், சப்கா விகாஸ்’ ஆகிய கொள்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
தலைநகர் டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் கட்சித் தொண்டர்களிடம் மகிழ்ச்சியுடன் உரையாற்றிய அவர், “சட்டமன்றத் தேர்தலில் இன்றைய வெற்றி வரலாற்று சிறப்புமிக்கது மற்றும் முன்னோடி இல்லாதது" என்றார். மேலும், இது தன்னிறைவு பெற்ற இந்தியாவுக்குக் கிடைத்த வெற்றி என்றும் அவர் குறிப்பிட்டார்.
சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் பிரசாரத்தைத் தாக்கிப் பேசிய அவர், “நாட்டை ஜாதி அடிப்படையில் பிளவுபடுத்த பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன” என்று கூறினார். நாட்டில் பெண்கள், இளைஞர்கள், ஏழைகள் மற்றும் விவசாயிகள் மட்டுமே சாதிகள் என்றும், அவர்களின் அதிகாரம் நாட்டை மேலும் வலுப்படுத்தும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
"எனக்கு நான்கு சாதிகள்தான் உயர்ந்தவை என்று நான் சொல்லிக்கொண்டே இருந்தேன். பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள் மற்றும் ஏழைகள். இந்த நான்கும் அதிகாரம் பெற்றால் நாடு வலுவடையும்" என்று அவர் கூறினார்.
மூன்று மாநிலங்களில் பெற்றிருக்கும் ஹாட்ரிக் வெற்றி மக்களவைத் தேர்தலில் பாஜகவின் ஹாட்ரிக் வெற்றிக்கு உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்திருக்கிறார்.
"பெண்களுக்கு அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளும் 100 சதவீதம் நிறைவேற்றப்படும் என்று உறுதியளிக்கிறேன். இது மோடியின் உத்தரவாதம்" என்றும் கூறினார்.
“வாக்காளருக்கு தங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துவதற்கான தெளிவான திட்டம் தேவை... இந்தியா முன்னேறும்போது மாநிலமும் முன்னேறி, ஒவ்வொரு குடும்பத்தின் வாழ்க்கையும் மேம்படும் என்பதை இந்தியாவின் வாக்காளர்கள் அறிந்துள்ளனர் அதனால்தான் வாக்காளர்கள் தொடர்ந்து பாஜகவை தேர்வு செய்கிறார்கள்" என்று பிரதமர் மோடி பேசினார்.
தேர்தல் முடிவு பற்றி ஒரே வார்த்தையில் கருத்து சொன்ன கார்த்தி சிதம்பரம்! வெறுத்தெடுக்கும் பாஜக!