ராஜஸ்தானில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்ட சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர், பல மாறுவேடங்களுக்குப் பிறகு இறுதியாக உ.பி. பிருந்தாவனத்தில் பெண் வேடத்தில் பதுங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார்.

ராஜஸ்தான் மாநிலம் தௌல்பூரில் சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சஸ்பெண்ட் செய்யப்பட்ட போலீஸ்காரர், உபி மாநிலம் பிருந்தாவனத்தில் பெண் வேடத்தில் பதுங்கியிருந்தபோது போலீசாரிடம் சிக்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ராஜஸ்தான் ஆயுதப்படை பிரிவில் (RAC) காவலராக இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டவர் ராம்பரோஸ் என்கிற ராஜேந்திர சிசோடியா. இவர் கடந்த டிசம்பர் 15ஆம் தேதி 16 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.

வேலை வாங்கித் தருவதாகக் கூறி அந்தச் சிறுமியையும் அவரது சகோதரரையும் தனது வீட்டிற்கு வரவழைத்த சிசோடியா, தந்திரமாகச் சிறுமியின் சகோதரரை கடைக்கு அனுப்பிவிட்டுச் சிறுமிக்குத் தொல்லை கொடுத்துள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் திரண்டபோது, மக்கள் எதிர்ப்பையும் மீறி அவர் தப்பியோடினார்.

சினிமா பாணியில் மாறுவேடங்கள்

போலீசாரிடம் சிக்காமல் இருக்க சிசோடியா ஆக்ரா, லக்னோ, குவாலியர் என இடங்களை மாற்றிக்கொண்டே இருந்துள்ளார். ஒவ்வொரு இடத்திலும் தனது அடையாளத்தை மறைக்கப் பல வேடங்களைப் போட்டுள்ளார்:

சில இடங்களில் உயர்ந்த அதிகாரி (VIP) போலக் காட்டிக்கொள்ள டிராக்சூட் மற்றும் விலையுயர்ந்த ஜாக்கெட்டுகளை அணிந்துள்ளார்.

சில இடங்களில் பெரிய போலீஸ் அதிகாரி போல நடித்து தப்பியுள்ளார்.

பிருந்தாவனத்தில் சிக்கிய 'பெண்' வேடம்

இறுதியாக அவர் பிருந்தாவனத்தில் இருப்பதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்தனர். போலீசார் அவரைச் சுற்றி வளைத்தபோது அவர் புர்கா அணிந்து, லிப்ஸ்டிக் பூசி ஒரு பெண்ணைப் போலத் வேடமிட்டிருந்தார். பெண் வேஷத்தில் போலீசாரிடமிருந்து தப்ப முயன்றுள்ளார். ஆனால், காவலர்களின் கிடுக்கிப்பிடி விசாரணையில் அவர் மாட்டிக்கொண்டார்.

"குற்றவாளி தனது தோற்றத்தை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருந்தார். இறுதியில் பெண் வேடத்தில் இருந்தபோது அவரைப் பிடித்தோம்," என எஸ்பி விகாஸ் சங்வான் தெரிவித்துள்ளார்.

யார் இந்த சிசோடியா?

இவர் ஏற்கனவே போக்சோ (POCSO) சட்டத்தின் கீழ் ஒரு வழக்கில் சிக்கியதால் பணியில் இருந்து நீக்கப்பட்டவர். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இவர் மீது பல புகார்கள் பதிவாகியுள்ளதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.