பெட்ரோல் லிட்டருக்கு 9 ரூபாய் குறைப்பு….. பங்க்குகளில் குவிந்த பொது மக்கள் !!
மகாராஷ்ட்ராவில் ராஜ் தாக்கரே பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.9 வரை குறைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டதால் இன்ப அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் பெட்ரோல் நிலையங்களில் குவிந்தனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையைப் பொறுத்து இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை அவ்வப்போது மாற்றி அமைத்து வருகின்றன. தொடக்கத்தில் 15 நாட்களுக்கு ஒரு முறை மாற்றி அமைக்கப்பட்ட விலை தற்போது நாள்தோறும் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 20 நாட்களாக இந்தியா முழுவதும் பெட்ரோல் விலை கடுமையாக உயர்ந்தது. லிட்டர் ஒன்றுக்கு 85 ரூபாய் வரை பெட்ரோல் விற்கப்பட்டது.
இந்நிலையில் மகாராஷ்ட்ரா நவநிர்மான் சேனா கட்சியின் தலைவராக உள்ள ராஜ் தாக்கரேவுக்கு இன்று 50 வது பிறந்தநாள். இந்த பிறந்த நாளை அக்கட்சியினர் வெகு விமரிசையாகக் கொண்டாடி வருகின்றனர்.
இந்த கொண்டாடடத்தின் ஒரு பகுதியாக மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட சில பெட்ரோல் பங்குகளில் 1 லிட்டர் பெட்ரோல் விலையில் 4 ரூபாய் முதல் 9 ரூபாய் வரையில் குறைத்து வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதை எதிர்பார்க்காத மகாராஷ்ட்ரா மக்கள், பெட்ரோல் பங்குகளில் நீண்ட வரிசையில் நின்று, வாகனங்களுக்கு பெட்ரோல் வாங்கிச் சென்றனர்.