நாடு முழுவதும் வருமானவரித்துறையினர் ரெய்டு - தொடர்கிறது அதிரடி...!!!
கருப்பு பணத்தை ஒழிக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பெங்களூரு, ஆக்ரா, அலகாபாத் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்பட்ட சோதனைகளில், கோடிக்கணக்கான பணம் மற்றும் ஏராளமான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் நகைக்கடைகள், நிதி நிறுவனங்கள், வர்த்தக நிறுவனங்களில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சிபிஐ உள்ளிட்ட அமைப்புகள் அதிரடி சோதனைகள் மேற்கொண்டு வருகின்றன. இதில் கணக்கில் காட்டப்படாத கோடிக்கணக்கான ரூபாய் பணம் மற்றும் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனிடையே, பெங்களூரில் நகைக்கடை உரிமையாளர்களுக்குச் சொந்தமான வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடிச் சோதனை நடத்தினர். இதில், கணக்கில் காட்டப்படாத 44 கோடியே 74 லட்சம் ரூபாய் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல், பெங்களூரு அருகேயுள்ள அங்கல் கிராமத்தில் 1 கோடியே 15 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். வங்கியில் இருந்து முறைகேடாக பணம் கொண்டு வரப்பட்டதை அறிந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
உத்திரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் தொழிலதிபர் ஒருவரின் வீடு, அலுவலகங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் கணக்கில் காட்டப்படாத 12 கோடி ரூபாய் மதிப்பிலான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதேபோல் அலகாபாத்தில் தொழிலதிபருக்குச் சொந்தமான இடங்களில் சோதனை செய்த போது, 1 கோடியே 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் சிக்கியது.