பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா பதிலடி கொடுத்தது. இதனால், மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மாநிலங்களுக்கும் அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளது.

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்தியா ; பஹல்காமில் இந்திய சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியானார்கள். இதனையடுத்து பாகிஸ்தான் மீது இந்திய அரசு கடுமையான உத்தரவுகளை அடுத்தடுத்து பிறப்பித்தது. மேலும் பாகிஸ்தானுக்கு எதிராக போர் நடவடிக்கைகளையும் தீவிரப்படுத்தியது. அந்த வகையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக பாகிஸ்தானில் உள்ள 9 தீவிரவாத மையங்களை குறிவைத்து தாக்கியது. இதில் 50க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தத்தாக கூறப்படுகிறது. 

பதற்ற நிலையில் இந்திய எல்லைகள்

இதனையடுத்து இதற்கு பழிவாங்கும் வகையில் பாகிஸ்தான் இந்தியா மீது ட்ரோன் மற்றும் ஏவுகனைகள் தாக்குதலை மேற்கொண்டது.. இதனை இந்திய ராணுவத்தின் வான் பாதுகாப்பு கவசம் வெற்றிகரமாக தாக்கி அழித்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவும் பாகிஸ்தான் மீது தாக்குதலை தீவிரப்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இந்தியாவில் நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டி ஒரு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும் அரசு அதிகாரிகளுக்கு முக்கிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் எல்லையோர மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை

இந்த நிலையில் தற்போது நாட்டில் உள்ள நிலையில் அவசர கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அனைத்துமாநில தலைமைச்செயலாளர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. இதன் படி, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மருந்து, உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களை இருப்பு வைக்க வேண்டும்,

வாகனங்கள், ஜெனரேட்டர், கூடாரம் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும். சிவில் பாதுகாப்பு விதிகளின் கீழ் அவசரகால அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டும் என மாநில தலைமை செயலாளர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.