ஓய்வு பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பு நீதிபதிகள் அவசரமாகப் பல உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போக்கை உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்ய காந்த் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஓய்வு பெறுவதற்குச் சில நாட்களுக்கு முன்பாக நீதிபதிகள் வரிசையாகப் பல உத்தரவுகளைப் பிறப்பிப்பது ஒரு துரதிர்ஷ்டவசமான போக்கு என்று இந்திய தலைமை நீதிபதி சூர்ய காந்த் கவலை தெரிவித்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நீதித்துறையில் நிலவும் இத்தகைய நடைமுறைகள் குறித்து அவர் தனது அதிருப்தியை வெளிப்படையாகப் பதிவு செய்துள்ளார்.

மேல்முறையீடு செய்த நீதிபதி

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு மாவட்ட முதன்மை நீதிபதி, தான் ஓய்வு பெற வெறும் 10 நாட்களே இருந்த நிலையில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் பிறப்பித்த இரண்டு நீதித்துறை உத்தரவுகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மால்யா பக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு, நீதிபதிகள் ஓய்வு பெறும் காலக்கட்டத்தில் அவசரம் அவசரமாக உத்தரவுகளைப் பிறப்பிப்பதைக் கடுமையாக விமர்சித்தது.

சிக்ஸர் அடிக்கும் நீதிபதிகள்

"ஓய்வு பெறுவதற்குச் சற்று முன்னதாக நீதிபதிகள் சிக்ஸர் அடிக்கத் தொடங்குகிறார்கள். இது ஒரு துரதிர்ஷ்டவசமான போக்கு. இதைப் பற்றி நான் விரிவாகப் பேச விரும்பவில்லை," என்று தலைமை நீதிபதி சூர்ய காந்த் குறிப்பிட்டார்.

ஓய்வுபெறும் தருவாயில், சில 'வெளிப்புறக் காரணங்களுக்காக' நீதிபதிகள் வரிசையாகப் பல உத்தரவுகளைப் பிறப்பிக்கும் போக்கு அதிகரித்து வருவதாக நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.

சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிபதி நவம்பர் 30-ம் தேதி ஓய்வு பெறவிருந்தார். ஆனால், அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 62-ஆக மாநில அரசு உயர்த்தியதால், அவர் மேலும் ஓராண்டு பணியில் இருக்க முடியும் என்பது அவருக்குத் தெரியவில்லை. இதைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, "தனது ஓய்வு காலம் ஓராண்டு நீட்டிக்கப்பட்டது தெரியாமல், அவர் அந்த இரண்டு உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்" என்று கிண்டலாகக் குறிப்பிட்டார்.

நீதிமன்றத்தின் கேள்வி

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விபின் சாங்கி, "தவறான உத்தரவுகளை மேல்முறையீடு மூலம் சரி செய்ய முடியும், அதற்காக ஒரு நீதிபதியை பணியிடை நீக்கம் செய்யலாமா?" என்று கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த உச்ச நீதிமன்றம, "தவறான உத்தரவு பிறப்பித்ததற்காக ஒரு நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியாது. ஆனால், அந்த உத்தரவுகள் தெளிவாகத் தவறான நோக்கத்தில் பிறப்பிக்கப்பட்டிருந்தால், நடவடிக்கை எடுப்பதில் தவறில்லை," என்று தெளிவுபடுத்தியது.

மேலும், தனது பணியிடை நீக்கத்திற்கான காரணத்தை அறிய அந்த நீதிபதி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் (RTI) பயன்படுத்தியதற்கும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. ஒரு மூத்த நீதிபதி இத்தகைய முறையைக் கையாண்டிருக்கக் கூடாது என்று நீதிபதிகள் கூறினர். இறுதியில், இந்த மனுவை உயர் நீதிமன்றத்திலேயே முறையிடுமாறு கூறி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.