கர்நாடக தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இருந்து விலகியவர்கள் வெற்றி பெற்றுள்ளார்களா என்று பார்க்கலாம்..
கர்நாடக தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் அறுதி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முன்னதாக தங்களுக்கு சீட் வழங்காததால் அதிருப்தியில் இருந்த பாஜக தலைவர்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு காங்கிரஸ் கட்சி தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கியது. கர்நாடக தேர்தலுக்கு முன்பாக பாஜகவில் இருந்து விலகியவர்கள் இந்த வெற்றி பெற்றுள்ளார்களா என்று பார்க்கலாம்..
லக்ஷ்மண் சாவடி
தேர்தலுக்கு முன்னதாக பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்த கர்நாடக முன்னாள் துணை முதல்வர் லக்ஷ்மண் சாவடி இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். பெலகாவி மாவட்டத்தில் உள்ள அத்தானி தொகுதியில் இருந்து மூன்று முறை எம்.எல்.ஏ-வாக இருந்தவரும், முக்கிய லிங்காயத் தலைவருமான லக்ஷ்மண் சவடி, பாஜகவின் மகேஷ் ரங்கவுடா குமதல்லியை 76,122 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து வெற்றி பெற்றார்.
தான் பாஜகவுக்கு விசுவாசமாக இருந்ததாகவும், மாநிலத்தின் பிற பகுதிகளிலும் கட்சி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ததாகவும் காங்கிரஸ் கட்சியில் சேருவதற்கு லக்ஷ்மண் சாவடி கூறியிருந்தார். ஆனால் 2023 சட்டமன்றத் தேர்தலில் அத்தாணி தொகுதியில் போட்டியிட்ட பாஜக சீட் வழங்கவில்லை.. கர்நாடகா தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சி அவரை அத்தானி தொகுதியில் நிறுத்துவதாக உறுதியளித்ததை அடுத்து அவர் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.
இதையும் படிங்க : காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்கும்! தேர்தல் வெற்றியை அன்றே துல்லியமாக கணித்த ஜோதிடர்
ஜெகதீஷ் ஷெட்டர்
கர்நாடகாவின் முன்னாள் முதல்வராக இருந்த ஜெகதீஷ் ஷெட்டருக்கு தேர்தலில் போட்டியிட பாஜக அனுமதி மறுத்ததையடுத்து, அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட மற்றொரு முக்கிய லிங்காயத் தலைவரான ஜெகதீஷ் ஷெட்டர், ஹூப்ளி-தர்வாட்-மத்திய தொகுதியில் பின்னடைவை சந்தித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியின் மகேஷ் தெங்கிணகையை எதிர்த்து ஜெகதீஷ் ஷெட்டர் களமிறங்கினார்.
எம்.பி.குமாரசாமி
முதிகெரே எம்எல்ஏவும், முன்னாள் பாஜக தலைவருமான எம்பி குமாரசாமி, பாஜக தனக்கு சீட் வழங்க மறுத்ததை அடுத்து, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இணைந்தார். எம்பி குமாரசாமி முடிகெரே தொகுதியில் காங்கிரஸின் நயனா மோட்டம்மா மற்றும் பாஜகவின் தீபக் தொட்டய்யா ஆகியோரை எதிர்த்து போட்டியிட்டார். எனினும் முடிகெரே தொகுதியில் காங்கிரஸ் மற்றும் பாஜக வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளி 3வது இடத்தை குமாரசாமி பெற்றுள்ளார்.
எச்.டி.தம்மையா
சிக்மகளூர் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் எச்.டி.தம்மையாவுக்கும், பாஜகவின் சி.டி.ரவிக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சி.டி.ரவியின் நெருங்கிய உதவியாளரான தம்மையா, பாஜக தனக்கு சீட் வழங்காததால் காங்கிரஸ் கட்சிக்கு மாறினார்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் அறுதி பெரும்பான்மை பெற்ற காங்கிரஸ்! அடுத்த முதலமைச்சர் யார்?
