முன்னாள் துணை முதல்வரின் உதவியாளர் மர்ம மரணம்... கர்நாடகாவில் பரபரப்பு..!
கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் மீது கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில் அவரது உதவியாளர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக முன்னாள் துணை முதல்வர் பரமேஸ்வர் மீது கடந்த இரண்டு நாட்களாக வருமானவரித்துறை சோதனை நடத்திய நிலையில் அவரது உதவியாளர் ரமேஷ் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான ஜி.பரமேஸ்வருக்குச் சொந்தமாக பெங்களூரு, தும்கூரில் உள்ள வீடுகள், அவரது குடும்பத்துக்குச் சொந்தமான சித்தார்த் கல்விக் குழுமத்தின் அலுவலகங்கள், அவரது உதவியாளர், நண்பர்கள் உள்ளிட்டோரின் வீடுகளில் அக்டோபர் 10-ம் தேதி முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வந்தனர். இந்த சோதனையில் ரூ.5 கோடி வரை ரொக்க பணம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.
பரமேஸ்வரின் தீவிர ஆதரவாளரான ரங்கநாத், அவரின் உதவியாளராக இருந்த ரமேஷ், பரமேஸ்வரின் அண்ணன் மகன் ஆனந்த் உள்பட பலரின் வீடுகளில் சோதனை நடத்தியதுடன் அவர்களிடம் முதல் கட்டமாக விசாரணை நடத்திய அதிகாரிகள், அழைக்கும் போது விசாரணைக்கு நேரில் வர வேண்டும் என்று உத்தரவிட்டனர். தனது வீட்டில் அதிகாரிகள் நடத்திய சோதனை, விசாரணை குறித்து நண்பர்களிடம் ரமேஷ் கூறியதுடன், அதிகாரிகள் கேட்கும் கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை என்று வருத்தப்பட்டுள்ளார்.
இதனையடுத்து, பரமேஸ்வர் வீட்டிற்கு செல்வதாக கூறி காரில் சென்றார். பின்னர், மன வேதனை அடைந்திருந்த ரமேஷ், தனது நண்பர்கள் ஒருசிலரைத் செல்போனில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது, தனக்கு வாழவே பிடிக்கவில்லை என்றும், தற்கொலை செய்துகொள்ளப்போவதாகவும் கூறியிருக்கிறார். மேலும், நான் பல்கலைக் கழக வளாகத்தில் இருப்பதாக கூறிவிட்டு, செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்துள்ளார்.
இதில் பதற்றமடைந்த நண்பர்கள் உடனடியாக வந்து பார்த்தபோது மரத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கிடந்தார். இது தொடர்பானக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, ரமேஷ் எழுதியுள்ள மரண வாக்குமூலத்தில், எனது வீட்டில் நடந்த வருமான வரி சோதனையால் மனவேதனை அடைந்துவிட்டேன். மரியாதைக்கு அஞ்சி தற்கொலை செய்து கொண்டுள்ளேன். குடும்பத்தினரை விட்டுப் போகிறேன். என்னை மன்னித்துவிடுங்கள் என்று ரமேஷ் தெரிவித்துள்ளார்.