தீவிரமடைந்த அசானி புயல்.. சூறாவளி காற்றுடன் அடித்து ஊற்றும் கனமழை.. 17 விமானங்கள் ரத்து..
அசானி புயல் எதிரொலியாக சென்னைக்கு வரும் மற்றும் புறப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விசாகப்பட்டினம், விஜயவாடா, ராஜமுந்திரி, ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களிலிருந்து வரும் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேற்கு மத்திய வங்கக் கடலில் உருவான 'அசானி' தீவிர புயலாக உருமாறி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, ஆந்திர கடற்கரை அருகே வலுவிழந்து வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், இன்று பிற்பகலுக்குள் காக்கிநாடா-விசாகப்பட்டினம் இடையே கரையை கடந்து, ஒடிசா நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. . காக்கிநாடாவை தொடும் புயல், பின்னர் திசைமாறி ஒடிசா கடலோரத்தை நோக்கி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க: கவனத்திற்கு..! ஆந்திராவுக்கு ரெட் அலர்ட்.. அசானி புயல் காரணமாக பொதுத்தேர்வு ஒத்திவைப்பு..
வடக்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் 105 கிலோ மீட்டர் வரை காற்று வீசக்கூடும் என்றும், கடல் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் புயலால் ஆந்திரா, ஒடிசா, மேற்குவங்கத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என்றும் நாளை காலைக்குள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே மோசமான வானிலை காரணமாக, சென்னையிலிருந்து ஹைதராபாத், மும்பை, விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு இயக்கப்படும் 17 விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னையிலிருந்து அந்தமான் புறப்படும் விமானங்கள் காலதாமதமாக செல்லும் எனவும் விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் படிக்க: கடலில் மிதந்து வந்த தேரால் பரபரப்பு..! அதிர்ச்சியில் கடலோர கிராம மக்கள்...ஆராய்ச்சியில் அதிகாரிகள்