கடலில் மிதந்து வந்த தேரால் பரபரப்பு..! அதிர்ச்சியில் கடலோர கிராம மக்கள்...ஆராய்ச்சியில் அதிகாரிகள்
கடலில் மிதந்து வந்த தேரை பார்த்த கடலோர கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், தங்க நிறத்தில் உள்ள தேரை கடல் வளத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
கடலில் மிதந்து வந்த தேர்
கோயில் நிகழ்வுகளில் தேரை சாலைகளில் மக்கள் வடம் பிடித்து வருவது சம்பிரதாயமாக இருந்து வருகிறது. ஆனால் கடலில் மிதந்து வந்த தேரை பொதுமக்கள் கயிறு கட்டி இழுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் ஶ்ரீகாகுளம் பகுதியில் சன்னப்பள்ளி கடற்கரைப்பகுதியில் தங்க நிறத்திலான தேர் மிதந்து வந்துள்ளது. இதனை பார்த்த கடற்கரையில் உள்ள மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கோயில்களில் உள்ள தேர் எப்படி கடலில் மிதந்து வருகிறது எனஆச்சர்யம் அடைந்தனர். இதனையடுத்து அந்த பகுதியில் உள்ள மக்கள் ஒன்றிணைந்து தேரை கயிற்றால் கட்டி கரையோரத்திற்கு கொண்டு வந்தனர். அருகில் தேர் வந்ததும் தான் தெரிந்தது இது பெரிய அளவிலான உண்மையான தேர் இல்லையென்பது. இருந்தபோதும் இந்த தேர் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளதால் இந்த தேரை பார்க்க அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநாட்டில் இருந்து வந்த தேரா?
தற்போது குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது அசனி புயலாக மாறியுள்ளது. இதன் காரணமாக காற்றின் வேகம் மற்றும் அலையின் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. எனவே தென் கிழக்கு ஆசிய நாடுகளான மியான்மர், தாய்லாந்து, மலேசியா,இந்தோனேசியா போன்ற நாடுகளில் இருந்து அலையின் இந்த தேர் காற்றில் அடித்து வந்திருக்கலாம் எனக்கூறப்படுகிறது.
திரைப்படங்களில் பயன்படுத்திய தேரா?
அதே நேரத்தில் இது தொடர்பாக கருத்து தெரிவித்த சாந்தபொம்மாலி பகுதியை சேர்ந்த தாசில்தார் சலமய்யா கூறும்போது, இந்த தேர் வெளிநாட்டில் இருந்து வர வாய்ப்பு இல்லையென்றும், கடலோரப்பகுதியில் எங்கையோ திரைப்படப்படப்பிடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்றும் அலையின் சீற்றத்தால் ஶ்ரீகாகுளம் பகுதிக்கு அடித்து வரப்பட்டு இருக்கலாம் என தெரிவித்தார்.