use nochi for joint pains

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திப்பிலிக்கொடி

திப்பிலி எல்லா இடங்களிலும் வளரக்கூடியது. திப்பிலியை வறுத்துப் பொடியாக்கி அரை கிராம்எடுத்து தேனுடன் கலந்து இரண்டு வேளை சாப்பிட்டுவந்தால், இருமல், தொண்டைக் கமறல், பசியின்மை, தாது இழப்பு ஆகியவை குணமாகும். இரைப்பை, கல்லீரல் வலுப்பெறும். தேமல் நோய் மறையும். 

திப்பிலிப் பொடி, கடுக்காய் பொடியை சம அளவில் கலந்து இலந்தைப்பழ அளவுக்கு இரண்டு வேளையாக மூன்று மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், இளைப்பு நோய் இருந்த இடம் தெரியாமல் ஓடிப்போகும்.

ஓமவள்ளி

கற்பூரவள்ளி என்றும் அழைக்கப்படும். வீட்டுத் தொட்டியில் வளர்க்க எட்டு மாதங்கள் ஆகும். இலை கசப்பு சுவையும் காரத்தன்மையும் கொண்டது. இதன் இலை மற்றும் தண்டுப்பகுதி இருமல், சளி, ஜலதோஷத்துக்கு முக்கியமான மருந்து. இதன் இலையைச் சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து கொடுத்தால், குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய சீதள இருமல் நோய் தீரும். 

இலைச் சாறை நெற்றியில் பத்து போட்டால், தலைவலி நீங்கும். குழந்தைகளின் அஜீரண வாந்தி நீக்கும். கண் அழற்சிக்கும் உகந்தது. மனக் கோளாறை சரிசெய்யும் மருந்திலும் இந்த மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இலையைக்கொண்டு பஜ்ஜி சுட்டுச் சாப்பிடலாம்.

துளசி

வீட்டில் வளர்க்க வேண்டிய மூலிகைகளில் துளசி முக்கியமானது. இதன் இலைகளில் இரண்டை நாள் தோறும் சாப்பிட்டுவந்தால், குடல், வயிறு, வாய் தொடர்பான பிரச்னைகள் வாழ்நாள் முழுவதும் வராது. கிருமிநாசினி.

துளசி இலையைப் போட்டு ஊறவைத்த தண்ணீரை தொடர்ந்து பருகி வந்தால், சர்க்கரை நோய் நம்மை நெருங்காது. குளிக்கும் நீரில் முந்தைய நாளே போட்டுக் குளித்தால், உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. மன இறுக்கம், ஞாபக சக்தி இன்மை, நரம்புக் கோளாறு, ஆஸ்துமா, இருமல் மற்றும் தொண்டை நோய்களை உடனுக்குடன் குணமாக்கும் சக்தி துளசிக்கு உண்டு.

தூதுவளை

இதன் இலை, பூ, காய், வேர் என அனைத்துமே மருத்துவக் குணம்கொண்டது. தூதுவளை இலையைப் பறித்து வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால், உடலுக்கு வலுவை கூட்டும். இருமல், சளி நீங்கும். ஆண்மை சக்தியை அதிகரிக்கும்.

வாதப் பித்தத்தைச் சரிப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜீரண சக்தி பலப்படும். தூதுவளையை நன்றாக அரைத்துத் தோசை மாவுடன் கலந்து அடை போலச் செய்து சாப்பிட்டால், ஜீரண சக்தியை அதிகப்படுத்தும். காது மந்தம், நமைச்சல், வயிறு மந்தம் போன்ற பிரச்னைகளுக்குச் சிறந்த மருந்து.

நொச்சி

கொசுக்கள் அருகில் வராது என்பதால், தமிழக அரசும் இதனை வீடுகளில் வளர்க்கும்படி பரிந்துரைக்கிறது. இலையைச் சூடான நீரில் போட்டு ஆவி பிடித்தால், தலைவலி, காய்ச்சல், சளித்தொல்லை, கை கால் வலி நீங்கும். இரவில் தலையில் வைத்துப் படுத்தால், தலைவலி, தலை நீர், தலை பாரம், நரம்பு வலி, கழுத்து வீக்கம், மூக்கடைப்பு போன்றவை குணமாகும். 

இதன் சாறை உடலில் இருக்கும் கட்டிகளின் மீது இரவு நேரத்தில் பற்று போட்டுவந்தால், கட்டிகள் மறைந்துவிடும். நொச்சி சாறைத் தேய்த்தால் நரம்பு பிடிப்பு, இடுப்பு வலி நீங்கும். இலைகளை அரைத்து மூட்டுகளில் கட்டினால், நாள்பட்ட மூட்டுவலி தொல்லையில் இருந்து விடுபடலாம்.