this food item has lot of medical benefits
கேழ்வரகு
நமது உடலுக்கு தினமும் தேவைப்படும் சத்துக்களுள் முக்கியமான ஒன்று கால்சியம். இது நாளொன்றுக்கு சுமார் 350 மி.கிராம் தேவைப்படுகிறது. அந்த அளவு கால்சியத்தை முழு அளவில் கொண்ட தானியமாக கேழ்வரகு இருக்கிறது. நூறு கிராம் கேழ்வரகில் மட்டும் சுமார் 344 மி.கி. கால்சியம் இருக்கிறது.
கேழ்வரகில் உள்ள புரதச்சத்து (Protein), பாலில் உள்ள புரதச் சத்துக்கு சமமாகும். ஆகவே பால் ஒத்துக்கொள்ளதவர்கள் (Lactose Resistant People) கேழ்வரகுக் கஞ்சியை குடிக்கலாம்.
வேறு எந்த தானியத்திலும், கேழ்வரகில் இருக்கும் அளவுக்கு, கால்சியம் சத்து இல்லை. எலும்பு வளர்ச்சிக்கும், எலும்பு உறுதியாக இருப்பதற்கும், 'ஆஸ்டியோ போரோசிஸ்' என்று சொல்லக்கூடிய எலும்பு மஜ்ஜை நோய் வராமல் இருப்பதற்கும், கால்சியம் நமது உடலுக்கு மிக,மிக உபயோகமாக இருக்கிறது.
வளரும் குழந்தைகளுக்கு தினமும் கால்சியம் சத்து மாத்திரை கொடுப்பதற்குப் பதிலாக, தினமும் கேழ்வரகில் செய்த கஞ்சி, கூழ் கொடுத்தாலே போதுமானது.
மற்ற எல்லா தானியங்களைவிட, கேழ்வரகில் கொழுப்புச் சத்து மிகக் குறைவாகத் தான் உள்ளது. அதோடு, கேழ்வரகில் இருக்கும் கொழுப்பானது கரையாத தனி கொழுப்பாகிய (Unsaturated Fat) நல்ல கொழுப்பாகும்.
ஆகவே உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, கோதுமை, அரிசி உணவுப்பொருட்களை விட கேழ்வரகில் செய்த உணவுப்பொருட்கள் மிகவும் நல்லது.
இரும்புச்சத்துக்கு அற்புதமான உணவு தானியம் கேழ்வரகு. அனீமியா அதாவது ரத்தச்சோகை நோய் உள்ளவர்களும், ரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களும், கேழ்வரகில் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தொடர்ந்து தினமும் சாப்பிட்டு வந்தால், ரத்தவிருத்தி கண்டிப்பாக ஏற்படும்.
அதேபோல், நாம் சாப்பிடும் உணவிலிருக்கும் இரும்புச்சத்தை உடல் இழுக்க வைட்டமின் சி மிகவும் உதவியாய் இருக்கிறது.
கேழ்வரகை தண்ணீரில் ஊறப்போட்டு முளை கட்டி வைத்தாலே, அதில் வைட்டமின் சி அளவு அதிகமாகிவிடும். ஆக, முளை கட்டிய கேழ்வரகைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே, இரும்புச்சத்து தானாகவே உடலிலிருந்து ரத்தத்துக்கு அதிகமாக இழுக்கப்படும்.
அரிசியை ஒப்பிடும் போது கேழ்வரகில், நார்சத்து அதிகமாகவே உள்ளது. எனவே வெகு சீக்கிரத்தில் மிகச் சுலபமாக ஜீரணமாகிவிடும். குறைவாக சாப்பிட்டாலும், வயிறு நிரப்பிய ஒரு உணர்வு ஏற்பட்டுவிடும். அதனால் அதிகமாக சாப்பிடவும் முடியாது. சீக்கிரத்தில் ஜீரணமாகி விடுகிறது என்பதனால், அடிக்கடி பசி எடுக்கும்.
கேழ்வரகிலுள்ள 'லெஸிதின்' மற்றும் 'மெத்தியோனின்' அமினோ அமிலங்கள், நமது உடலிலுள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க மிகவும் உதவியாய் இருக்கின்றது.
கேழ்வரகிலுள்ள 'திரியோனின்' என்கிற அமினோ அமிலமும், கல்லீரலில் கொழுப்பு உருவாவதைத் தடுக்கிறது.
ஆக மொத்தத்தில் உடலிலும், இரத்தத்திலும் உள்ள கொலஸ்ட்ராலைக் குறைக்க, கேழ்வரகில் செய்த உணவுப்பொருட்கள் மிகவும் உதவியாய் இருக்கின்றன.
