Asianet News TamilAsianet News Tamil

ஒற்றைத் தலைவலி - ஏன் வருகிறது? முதல் எப்படி குணப்படுத்துவது? வரை ஒரு அலசல்...

Single headache - why is it coming? How to Cure First Up an alarm ...
Single headache - why is it coming? How to Cure First Up an alarm ...
Author
First Published Feb 5, 2018, 2:14 PM IST


ஒற்றைத் தலைவலி

தாங்கவே முடியாதது எனச் சில வலிகள் உண்டு. அந்தப் பட்டியலில் முதல் வலி… தலைவலி. அதிலும், ஒற்றைத்தலைவலி வந்துவிட்டால்… அதோ கதி. தலையில் ஒரு பக்கமாகத் தொடர்ந்து வலித்துக்கொண்டே இருக்கும்; ஒரு வேலையும் செய்ய முடியாது. கையும் ஓடாது, காலும் ஓடாது. 

சிலருக்கு மாலை வேளையானால் தலைவலி தொடங்கிவிடும். அதிகச் சத்தம் கேட்டால், மனதுக்குப் பிடிக்காத சம்பவங்கள் நடந்தால்… என தலைவலிக்கான காரணப் பட்டியலின் நீளம் அதிகம். 

தலைவலிக்கும் நேரத்தில் யாராவது அன்பாகப் பேசினால்கூட எரிச்சலாக வரும்; கோபம் தலைக்கு ஏறும். `இதற்குத் தீர்வே இல்லையா?’ எனப் புலம்புவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. 

காலையில் எழுந்து பல் துலக்கியதுகூட, ஒற்றைத் தலைவலிக்குக் காரணமாக இருக்கலாம் என்றால் நம்ப முடிகிறதா?

ஏன் வருகிறது?

அதிக வேலை, மனக் குழப்பம், மன அழுத்தம் ஆகியவையே, ஒற்றைத்தலைவலி வருவதற்கு முக்கியமான காரணங்கள். உடலின் வெப்பமும் தலைவலி வருவதற்கு ஒரு காரணம். உடலில் வெப்பம் அதிகரிக்கும்போது, தலைக்குச் செல்லும் நரம்பு மண்டலங்களில் ரத்த ஓட்டம் தடைபடும். 

இதனால், அதன் இயக்கத்தில் மாறுபாடு உண்டாகி, தலைவலி வரும். உடல் வெப்பத்தைச் சமநிலையில்வைக்க, வாரம் ஒரு முறையாவது எண்ணெய்க் குளியல் எடுத்தால் போதும்.

சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னை இருந்தாலும், உடலில் வெப்பம் அதிகமாகி, தலைவலியை உண்டாக்கும். உணவில் உப்பு, காரம், புளிப்பு சம அளவில் இருக்க வேண்டும். இதில், ஏதேனும் ஒன்றை மட்டும், தொடர்ந்து அதிகமாக எடுத்துக்கொள்வோருக்கும் இந்தப் பிரச்னை உண்டாவதற்கு வாய்ப்புகள் உண்டு.

ரத்தக் குழாய்கள் விரிவடைதல் மற்றும் வீங்குதலாலும் வலி உண்டாகும். அந்த நேரத்தில், நைட்ரிக் ஆக்ஸ்சைடு அமிலம் அதிகமாகச் சுரக்கும். அது, ரத்தக் குழாய்களைத் தூண்டும்.

5-ஹைட்ராக்சிரிப்டமின் (5-Hydroxytryptamine) எனும் அமிலத்தின் அளவும் ரத்தத்தில் அதிகரிக்கும். அப்போது ஏற்படும் சீரற்ற ரத்த ஓட்டத்தினால் நரம்புகள் பாதிக்கப்பட்டு, வலி உணரப்படும். வலி உணர்ச்சியைத் தரக்கூடிய ட்ரைஜெமினல் (Trigeminal) என்னும் அமிலமும் அதிகம் சுரந்து, வலி உணர்வை அதிகரிக்கும். இவ்வாறு உண்டாகும் வலி, அதிகபட்சம் நான்கு மணி நேரம் வரையிலும் நீடிக்கலாம். சிலருக்கு இரண்டு பக்கங்களிலும் வலி வரலாம்.

பார்வை நரம்புகளில் ஏற்படும் பாதிப்புகளாலும் ஒற்றைத்தலைவலி வரும். இரவில் அதிக நேரம் கண் விழித்திருத்தல், காலையில் அதிக நேரம் உறங்குதல், வெயிலில் அதிக நேரம் இருப்பதும்கூட தலைவலிக்குக் காரணமாகிவிடும். உடலின் வேறு பிரச்னைகளுக்காக அடிக்கடி மருந்து, மாத்திரைகள் எடுத்துக்கொள்வோருக்கும், ஒற்றைத்தலைவலி ஏற்படும் வாய்புகள் அதிகம்.

அறிகுறிகள்?

வலி வருவதை சில அறிகுறிகளை வைத்து முன்னரே கண்டுகொள்ளலாம். திடீரென சில பகுதிகள் வட்டமாகப் பார்வைக்குத் தெரியாமல் போவது (Scotoma), 

ஒரு பக்கம் மட்டும் தெரியாமல் போவது (Hemianopsia). கண்ணில் ‘பளிச்பளிச்’ என மின்னுவது (Teichopsia), 

சமதளமான இடத்திலும் வரிவரியாகக் கோடுகள் தெரிவது (Fortification Spectra), 

கண்ணுக்குள் பூச்சி பறப்பது, எதிரில் உள்ள உருவம் கறுப்பாகத் தெரிவது எனச் சில அறிகுறிகள் தென்படும்.

சிலருக்கு, தற்காலிகமாகப் பேச்சு வராது. ஒரு பக்கமாக கை, கால்களில் துடிப்பு, மதமதப்பு உண்டாகி சரியாகும். 

வாந்தி அல்லது குமட்டல் உணர்வு இருக்கும். இந்த நேரத்தில், அமைதியாக அறைக்குள், அனைத்து விளக்குகளையும் அணைத்துவிட்டு, இருளை ஏற்படுத்திக்கொண்டு உறங்குவது சற்று ஆறுதல் தரும்.

உங்க டூத் பேஸ்ட்ல இருக்கு சிக்கல்

சமீப காலங்களில் பல் துலக்கும் டூத் பேஸ்ட்களாலும், ஒற்றைத்தலைவலி வருவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பல் துலக்கியதும், கடமைக்கு என வாய் கொப்பளிப்போருக்குத்தான் இந்த வாய்ப்பு இன்னும் அதிகம். 

நாக்கிலேயே ஒட்டியிருக்கும் டூத் பேஸ்ட்டின் வேதிக்கலவை, சாப்பிடும்போது அப்படியே உடலுக்குள் சென்றுவிடும். நேரடியாக நுரையீரலைப் பாதிக்கும். பல நாட்களுக்குத் தொடர்ந்து இவ்வாறு நடக்கும்போது, தலைவலியை உண்டாக்கிவிடும். 

தவிர, உடுத்தும் உடைகளில் ஒட்டியிருக்கும் டிடர்ஜென்ட் பௌடர், வாசனைத் திரவியங்கள் வியர்வை வழியாக உடலில் கலந்தாலும் இப்படியான சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு சாக்லேட், சீஸ், எண்ணெய் உணவு, வெண்ணெய், புளிப்பு அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகளைச் சாப்பிடுவதாலும் வலி வரும்.

பெண்களையே அதிகம் பாதிக்கும்...

ஆண்களைக்காட்டிலும், பெண்களே ஒற்றைத்தலைவலியால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு, கர்ப்பப்பை பிரச்னை, நீர்க்கட்டிகள், ஒழுங்கற்ற மாதவிலக்கு, வெள்ளைப்படுதல் போன்றவை காரணமாக இருக்கின்றன. 

தவிர, பூப்பெய்தும் காலம், மாதவிலக்கு வரும் காலக்கட்டம், மெனோபாஸ் நிலையை அடையும்போது, கருத்தடைக்காக ஹார்மோன் மாத்திரைகள் சாப்பிடும் நேரங்களிலும் ஒற்றைத்தலைவலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

பீடி, சிகரெட், புகையிலை பயன்படுத்தும் ஆண்களின் உடலில் உண்டாகும் பித்தத்தால், உடலின் ஆற்றல் குறையும். இதனால், வயிற்றுப்புண் உண்டாகி, வெப்பம் அதிகரிக்கும். இதுவும் ஒற்றைத்தலைவலியில் முடியும்.

குணப்படுத்துவது எப்படி?

பக்கவாத ஒற்றைத் தலைவலி (Hemiplegic Migraine ), கண் நரம்பு ஒற்றைத்தலைவலி (Ophthalmoplegic Migraine) முக நரம்பு ஒற்றைத்தலைவலி (Facioplegic Migraine) என வலிகளில் பலவகை உள்ளன. மனதை அமைதியாக வைத்துக்கொள்ளுதல், தேவையற்ற சிந்தனையைத் தவிர்த்தல், நல்ல தூக்கம் என வாழ்க்கைமுறைகளை மாற்றிக்கொண்டாலே வலி வராமல் தடுத்துக்கொள்ள முடியும். 

அலுப்பு தரக்கூடிய ஒரே வேலையைத் திரும்பத் திரும்பச் செய்யாமல் இருத்தல், மனதுக்குப் பிடித்த வேலைகளைச் செய்தல், வயல்வெளி, பூங்கா, இயற்கைக் காட்சிகளை ரசித்தல் எனப் பசுமையான இடங்களுக்குச் செல்வதன் மூலம் மனதை அமைதிப்படுத்தி, வலி உண்டாகாமல் தவிர்க்கலாம். 

தவிர, உடலில் வெப்பம் அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். தலையில் நீர்கோத்தல், மூளையில் கட்டி என ஒற்றைத்தலைவலி ஏற்பட பல காரணங்கள் உள்ளன. எனவே, சாதாரணத் தலைவலி என்று புறக்கணிக்காமல், ஏன் ஏற்படுகிறது எனக் காரணத்தை ஆராய்ந்து, அதற்கான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். 

வலி, தாங்கவே முடியாதபட்சத்தில் மட்டும் மருத்துவரின் பரிந்துரைப்படி வலி நிவாரண மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். ஒற்றைத் தலைவலி தீர்க்கவே முடியாத நோய் என்றுதான் பலரும் பயப்படுகின்றனர். அது, ஓர் அறிகுறி மட்டுமே. நோய்க்கான அறிகுறியை அறிந்து வாழ்க்கைமுறையை மாற்றிக்கொண்டால், ஒற்றைத்தலைவலியில் இருந்து விடுபடுவது நிச்சயம்.

Follow Us:
Download App:
  • android
  • ios