Asianet News TamilAsianet News Tamil

சுவையும் சத்தும் நிறைந்த காராமணி வடை செய்திருக்கிறீர்களா?

பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள காராமணி வைத்து சுண்டல், துவையல், குழம்பு,பொரியல் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் காராமணி வைத்து சத்தான சுவையான வடையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்
 

Karamani Vadai Recipe in Tamil
Author
First Published Mar 19, 2023, 8:04 AM IST

தினமும் நாம் காலை ,மதிய, இரவு நேர உணவுகளுக்கு இடைப்பட்ட நேரங்களில் ஏதோ ஒரு தீனியை சாப்பிட்டுக் கொண்டே இருப்போம். அதிலும் குறிப்பாக மாலை நேரத்தில் சுட சுட காபியோ அல்லது டீயுடன் வடை,பஜ்ஜி,போண்டா,சமோசா என்று சாப்பிடுவோம். வடை என்று கூறும் போது பருப்பு வடை, மெது வடை, கீரை வடை, மசால் வடை என்று சொல்லிக் கொண்டே செல்லலாம். ஆனால் இன்று நாம் ஒரு ஆரோக்கியமான வடை ரெசிபியை தான் பார்க்க உள்ளோம்.

பல்வேறு சத்துக்களை கொண்டுள்ள காராமணி வைத்து சுண்டல், துவையல், குழம்பு,பொரியல் போன்றவற்றை செய்து சாப்பிட்டு இருப்பீர்கள். ஆனால் காராமணி வைத்து சத்தான சுவையான வடையை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள்:

காராமணி - 1 கப்
பெரிய வெங்காயம் - 1
காய்ந்த மிளகாய் - 2
சோம்பு - 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1 கொத்து
இஞ்சி - 1 இன்ச்
தேங்காய்-1/4 கப்
பெருங்காயத் தூள் - 2 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -தேவையான அளவு
மல்லித்தழை-கையளவு

அட! சிவப்பரிசியில் இத்தனை நன்மைகள் உள்ளதா? பார்க்கலாம் வாங்க!

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் காராமணி சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி சுமார் 5 நிமிடங்கள் வரை ஊற வைத்து பின் அதனை தண்ணீர் இல்லாமல் வடிகட்டி மிக்சி ஜாரில் சேர்க்க வேண்டும்.அதனுடன் காய்ந்த மிளகாய், சோம்பு மற்றும் உப்பு ஆகியவை சேர்த்து கொரகொரவென அரைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம் ,பச்சை மிளகாய் மற்றும் மல்லித்தழையை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் மற்றும் இஞ்சியை துருவி வைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்த மாவினை ஒரு கப்பில் சேர்த்து அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம்,பச்சை மிளகாய், மல்லித்தழை மற்றும் பெருங்காயத் தூள் ஆகியவை சேர்க்க வேண்டும். மேலும் அதில் துருவிய தேங்காய் மற்றும் இஞ்சி ஆகியவையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின் அதில் பிசைந்து வைத்துள்ள மாவினை உருண்டைகளாக செய்து வாழை இலையில் சிறிது எண்ணெய் தடவி வடை போன்று தட்டி எண்ணெய்யில் போட வேண்டும். இப்போது அடுப்பின் தீயினை சிம்மில் வைத்து இரண்டு பக்கமும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சத்தான சுவையான காராமணி வடை ரெடி!நீங்களும் இதனை ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்!

Follow Us:
Download App:
  • android
  • ios